– தனசேகர்

ஒரு நள்ளிரவு நேரம். தெருவிளக்குகள் தோற்றுப்போய் சாலைகள் இருளில் மூழ்கியிருந்தன. ஓலைக் குடிசையின் செல்லரித்த இடைவெளியில், உறக்கம் கலைந்து எட்டிப் பார்க்கிறேன் நான். ஆள் நடமாட்டம் அங்கொன்றும், இங்கொன்றுமாய் தென்பட்டுப் பிறகு அடங்கிப்போனது. நானும் மீண்டும் தூங்க முற்பட்டு, மெல்ல கண் அயர்ந்த நேரம், திடீரென அந்த சத்தம். நான்கு பேரின் நடமாட்டம் அந்த இருட்டிலும் என் கண்களுக்கு தெளிவாய் தெரிகிறது. அவர்கள் போடும் சத்தத்தை என் காதுகளால் உணர முடிகிறது. அவர்கள் என் வீட்டை நோக்கித்தான் வருகிறார்களா…? ஆம். அவர்கள் நால்வரும் என் வீட்டை சத்தமில்லாமல் நெருங்குகிறார்கள். என் பார்வை இன்னும் கூர்மையானது. அவர்களை அடையாளம் கண்டுகொண்டதும், எனது கோபம் தலைக்கேறியது.
ஆம். அவர்கள்தான். என்னோடு படுத்து உறங்கிக்கொண்டிருந்த எனது ஆருயிர் சகோதரனை, இதேபோன்ற ஒரு நடுஇரவில் இழுத்துச் சென்று, நடுரோட்டில் வைத்துக் கொன்றது அவர்கள்தான். இப்போது மீண்டும் வருகிறார்கள். வரட்டும். இந்த முறை எனக்குப் பயமில்லை. எதற்கும் துணிந்துவிட்டேன். அன்று அவர்கள் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட தெருவிளக்குகளின் இயலாமையை, இன்று எனக்கு சாதகமாக்கிக் கொள்ளப்போகிறேன். பதுங்கிப் பாய்வதற்குப் பழகிக் கொள்ளப்போகிறேன். வரட்டும்.
************
பிரபல திரைப்பட இயக்குநரின் வீட்டின் முன்பாக காத்துக்கிடந்தான் குமரன். பொறியியல் பட்டதாரி. சிறுவயதில் இருந்தே சினிமாவின் மீதிருந்த தீராத காதலை சற்று தள்ளி வைத்துவிட்டு, நிலுவையில் வைத்திருந்த பதினைந்து அரியர் பேப்பர்களையும் ஒரே அட்டெம்ப்ட்டில் கிளியர் செய்தவன்.
எந்த இயக்குநரின் வீட்டுக் கதவைத் தட்டினாலும், வாட்ச்மேன் முதல் எல்லோரும் சொன்னது… “சினிமா எங்கேயும் போய்விடாது… முதலில் உனது அரியர் பேப்பர்களை முடித்துவிட்டு டிகிரியோடு வா…” என்றுதான். அதற்காகவே கஷ்டப்பட்டு படித்து கிளியர் செய்தவன், அதைவிட கஷ்டப்பட நேர்ந்தது, அவனது பெற்றோர்களை சமாதானம் செய்ய.
லட்சக்கணக்கில் செலவு செய்து பொறியியல் படிக்க வைத்தது, ஒரு பெரிய கம்பெனியில் கை நிறைய சம்பளம் வாங்கி வாழ்க்கையில் செட்டில் ஆகத்தானே…? அதை விடுத்து ‘கதை எழுதுகிறேன், குறும்படம் எடுக்கிறேன், உதவி இயக்குநராக சேரப் போகிறேன், திரைப்பட இயக்குனராகி, சமுதாய சிந்தனையுள்ள நல்ல படம் எடுத்து நாட்டை திருத்தப் போகிறேன்’ எனச் சொன்னால் யார்தான் எடுத்த எடுப்பிலேயே ஒப்புக்கொள்வார்கள்…?
எப்படியோ ஒரு வழியாக பெற்றோர் சம்மதத்துடன் சென்னைக்கு வந்துவிட்டான். தனது லட்சியத் திரைப்படத்திற்கான கதைக் களங்களை சில வெள்ளைத் தாள்களில் கதைகளாக எழுதி ஒரு ஃபைலில் வைத்துக்கொண்டு, தனக்குப் பிடித்தமான அந்தத் திரைப்பட இயக்குனரின் வீட்டு காம்பவுண்டு கேட் முன்பாக வந்து நின்றான். தான் அவ்வப்போது இயக்கிய நான்கைந்து குறும்படங்களின் லிங்க்கை ஸ்மார்ட் ஃபோனில் தயாராக வைத்துக்கொண்டான்.
“சினிமா ஒரு மாய உலகம்… இதில் வந்து விழுந்து உனது வாழ்வை வீணடித்து விடாதே” என அங்கிருந்த வாட்ச்மேன் குமரனுக்கு இலவசமாக உபதேசம் செய்ய ஆரம்பித்தார். பல பேரிடம் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன அந்த உபதேசத்தை, மீண்டும் கேட்க விருப்பமில்லாத குமரன், அவரிடம் உறுதியாய் சொன்னான்.
“டைரக்டர் சார்கிட்ட சொல்லுங்க… இரண்டு மாசத்துக்கு முன்னாடி நான் வந்துட்டு போனேன்… என்னை டிகிரி முடிச்சுட்டு வரச்சொல்லியிருந்தார். இப்போ நான் முடிச்சுட்டேன். அவர் வரச்சொன்னா என்னை அனுப்புங்க… இல்லைன்னா நான் கிளம்பறேன்”
சொல்லிவிட்டுக் காத்திருந்தான். அவனை ஆச்சரியமாய் பார்த்துக்கொண்டே அங்கிருந்த இன்டர்காமில் எண்களைத் தட்டினார் அந்த வாட்ச்மேன்.
************
என்னால் நான்கு பேரை ஒரே நேரத்தில் எதிர்கொண்டு சமாளிக்க முடியாதுதான். ஆனால் ஒவ்வொருவராய் சமாளிக்க எனக்கு தெம்பிருக்கிறது. என் சகோதரனின் மறைவு எனக்கு அந்த தைரியத்தைக் கொடுத்திருக்கிறது. வரட்டும். ஓலைக் குடிசை என்பதால் சுலபமாய் உள்ளே நுழையப் பார்ப்பார்கள். கதவில்லாத குடிசையில் நான் இருப்பது எனது பலவீனம் என்றால், தெருவிளக்குகள் தோல்வியில் துவண்டு கிடப்பது யாருடைய பலவீனம்…?
வெளிச்சம் இருந்திருந்தால் அன்று என் சகோதரனுக்கு அந்தச் சம்பவம் நடந்திருக்குமா…? சாலையில் வைத்து எனது சகேதரனைக் கொன்றிருப்பார்களா…? அந்த தைரியம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்குமா…? வேண்டாம். இந்த இடத்தில் நான் அரசியல் பேச விரும்பவில்லை. என்னைக் காப்பாற்றிக் கொள்ள எனக்குத் தெரியாதா என்ன…?
அவர்கள் கிட்டத்தட்ட என்னை நெருங்கிவிட்டார்கள். நான் பார்த்துக்கொள்கிறேன். என்னைக் காப்பாற்றும் முயற்சியில் நீங்கள் வரப்போவதில்லை. அவர்கள் என்னை தாக்கினாலும் உங்களுக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். பரவாயில்லை. நீங்கள் உங்கள் உறக்கத்தைத் தொடருங்கள். என்னை நான் பார்த்துக்கொள்கிறேன்.
அதுமட்டுமல்லாமல் என்னையும், எனது குடும்பத்தாரையும் கொல்ல முயன்றவர்களில் நீங்களும் ஒருவர்தானே…? எத்தனை முறை எத்தனை வழிகளில் எங்களை குடும்பத்தோடு அழிக்கப் பார்த்திருப்பீர்கள்…? மறக்க முடியுமா…?
அதோ வருகிறார்களே… அவர்களாவது எங்களது எதிரிகள். ஆனால் நீங்கள்…?
வேண்டாம். என்ன இருந்தாலும் உங்கள் வீட்டில் சாப்பிட்டு வளர்ந்தவர்கள் நாங்கள். உங்களை வசைபாட எனக்கு மனம் வரவில்லை. அவர்கள் வரட்டும்.
************
உள்ளே செல்லுமாறு வாட்ச்மேன் சைகை செய்ய, ஒரு நன்றியை சொல்லிவிட்டு அந்த பங்களாவிற்குள் நுழைந்தான் குமரன்.
பக்கவாட்டில் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த ஒருவர் பைப்பை அப்படியே போட்டுவிட்டு வந்து, குமரனை எதிர்கொண்டார். அநேகமாய் அவர் இந்த இயக்குனரின் உதவி இயக்குனர்களில் ஒருவராகத்தான் இருக்க வேண்டும். ஃபீல்டுல நல்லா வேலை செய்யாதவர்களை, வீட்டில் சொந்த வேலை வாங்குவார்கள் சில இயக்குனர்கள் என எங்கோ ஒரு மாத இதழில் படித்தது குமரனுக்கு நினைவுக்கு வந்தது.
அவனை நினைத்து சற்று பரிதாபப்பட்ட குமரன், ‘அவனாவது சம்பளம் என்ற ஒன்றை ஒவ்வெரு மாதமும் வாங்குகிறான். ஆனால் நாம்…?’ என மனதிற்குள் தனக்குத் தானே வினா எழுப்பிக்கொண்டு சிந்தனையைப் புறந்தள்ளினான்.
அந்த நபர் குமரனை இயக்குனரிடம் பவ்யமாக அழைத்துச் சென்று எதிரே நிற்க வைத்துவிட்டு, வேகவேகமாய் வெளியே வந்து மீண்டும் தண்ணீர் பாய்ச்ச ஆரம்பித்தான்.
“வணக்கம் சார்…”
சொன்ன குமரனை சட்டென அடையாளம் கண்டுகொண்டவராய், “நீ ஒரு ரெண்டு மாசத்துக்கு முன்னாடி வந்திருந்தே இல்ல… எஞ்சினியரிங் முடிக்காம அரியர்ஸ் வச்சிருக்கிறதா சொன்னியே… உன் பேரு கூட ஏதோ நல்ல தமிழ்ப் பேராச்சே…” என வினவியவரை ஆச்சரியமாய் பார்த்தவன், சற்றே முகமலர்ச்சியோடு பேச ஆரம்பித்தான்.
“தேங்க்ஸ் சார்… என்னை ஞாபகம் வெச்சிருந்ததுக்கு. என் பேர் குமரன்…”
“ம்… குமரன்… யெஸ். என்ன தம்பி டிகிரி முடிச்சிட்டியா…?”
“முடிச்சுட்டேன் சார;”
“அப்புறம் என்ன… ஒரு நல்ல வேளைக்குப் போலாமே…?”
“வேலைக்குப் போக விருப்பமில்லை. சினிமா எடுக்கக் கத்துக்கிட்டு, நல்ல டைரக்டராகணும். அதுதான் என் லட்சியம்”
சிரித்தார் அந்த இயக்குநர். “அப்புறம் எதுக்கு அரியர்ஸ் கிளியர் பண்ணி டிகிரி முடிச்சே…”
“நீங்க தானே சார் அன்னிக்கு சொன்னீங்க… டிகிரிய முடிச்சுட்டு வா பார்க்கலாம்னு…”
“தம்பி… நான் எதுக்காக அப்படி சொன்னேன்னு தெரியுமா…?”
குமரன் புரியாமல் பார்க்க, அவர் தொடர்ந்தார்.
“டைரக்டராகணும்னு உன்னை மாதிரி சென்னைக்கு வர்ற பலபேர் உண்மையான லட்சியத்தோடு வர்றதில்லை. பெரிய ஆள் ஆகணும், சீக்கிரமா கோடி கோடியா சம்பாதிக்கணும்னு மேம்போக்கான ஆசையோடுதான் வர்றாங்க. போய் டிகிரியை முடிச்சுட்டு வா-னு சொன்னா திரும்பி போறவங்க, அப்புறம் பெரும்பாலும் வர்றதில்லை. ஏன்னா கஷ்டப்பட்டு டிகிரி முடிக்கிறவங்க… சினிமாவில் சேர்ந்து பெரிய ஆள் ஆக எத்தனை வருஷம் ஆகுமோ தெரியாது, நாம இந்த டிகிரியை வெச்சு ஒரு வேலைக்கு போகலாம்னு முடிவெடுப்பாங்க. அப்போ என்ன அர்த்தம்…? லட்சியத்தில் உறுதியா இல்லைன்னுதானே அர்த்தம்…?”
“ஆனா நான் அப்படி இல்லை சார். என் குடும்பம் சாதாரண மிடில் கிளாஸ் ஃபேமிலிதான். வேலைக்குப் போக வேண்டிய சூழ்நிலை. ஆனாலும் கஷ்டப்பட்டு பெற்றோர் சம்மதம் வாங்கி இங்கே வந்திருக்கேன்”
“சரி உனக்கு என்கிட்ட அசிஸ்டெண்ட்டா சேர என்ன தகுதி இருக்குன்னு நினைக்கிறே…?” அவர் கேட்க, அதற்காகவே காத்திருந்தவன் போல், தான் எழுதிய நான்கைந்து கதைகளையும், தான் எடுத்த குறும்படங்கள் சிலவற்றையும் காண்பித்தான். சில நிமிடங்களை செலவு செய்து அவற்றை மேம்போக்காக பார்த்தவர், தொடர்ந்தார்.
“உன்னை வேலைக்கு சேர்க்கிறேன்னு…”
அவர் சொல்லி முடிப்பதற்குள், “தேங்க்ஸ் சார்” என்றான் குமரன்.
“இருப்பா… வேலைக்கு சேர்க்கிறேன்னு வை… சம்பளம் கிடையாதுன்னு சொன்னா என்ன செய்வே…?” லேசாய் முகம் மாறிய குமரன், கோபத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சொன்னான்.
“வேலை வேண்டாம்னு போய்டுவேன் சார்…”
************
என் சகோதரனைக் கொன்ற அன்றைக்கே எனக்குத் தெரியும், அந்த நால்வரும் மறுபடியும் ஒருநாள் இங்கு வருவார்கள் என்று. ஏனென்றால் அன்றைக்கு என்னோடு உறங்கிக் கொண்டிருந்த எனது சகோதரனை மட்டும் தான் அவர்கள் பார்த்தார்கள். இருட்டில் என்னை கவனிக்கத் தவறிவிட்டார்கள். நானும் ஏதும் செய்ய முடியாத நிலையில் இருந்துவிட்டேன். என்ன செய்வது? அப்போது எனக்கு இந்த அளவிற்கு மெச்சூரிட்டி வரவில்லை.
அவர்கள் நான்கு பேர், நான் ஒரு ஆள், உயிர் பயம் வேறு. நான் என்ன செய்வது…? அப்போதைய எனது இயலாமையை நினைத்து நான் நொந்துப்போன மணித்துளிகள் எத்தனை தெரியுமா…? அனைத்து சோகங்களையும் கோபத்ததையும் மனதிற்குள் அடக்கி வைத்திருக்கிறேன். இன்று ஆக்ரோஷமாய் பதுங்கிப் பாயப் போகிறேன். ஏனென்றால் முன்பை விட இப்போது உடலளவிலும் மனதளவிலும் நான் பக்குவமடைந்துவிட்டேன். வரட்டும், அந்த நால்வரும் என்னை நெருங்கி வந்துவிட்டார்கள். வரட்டும்.
************
அந்தத் திரைப்பட இயக்குநர் இப்போது ஏளனமாய் பார்த்து சிரித்தபடியே சொன்னார். “பார்த்தியா… இப்போ எங்கப் போச்சு உன்னோட லட்சியம்? சம்பளம் இல்லைன்னு சொன்னதும் புறப்படுறேன்னு சொல்றே…?” சொல்லிவிட்டு, தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த அந்த நபரை பெயர் சொல்லி அழைத்த இயக்குநர், இருவருக்கும் டீ கொண்டு வந்து வைக்கச் சொன்னார். அவன் டீ எடுத்துக் கொண்டு வரச் சென்றதும் தொடர்ந்தார்.
“இவன் என்கிட்ட உதவி இயக்குநரா சேர்ந்து நாலு வருசமாச்சு. அவனோட லட்சியத்தின் உறுதியைப் பார்த்தியா…?”
குமரன் சொன்னான். “சாரி சார் நீங்க நினைக்கிற மாதிரி ஆள் நான் இல்லை. என்னால் அப்படி இருக்கவும் முடியாது. என்னைப் பொறுத்தவரை ஒருவர் சுயமாய் சிந்தித்து ஒரு கருத்தை சொல்லும்போது, தன் நேரத்தை செலவழித்து உழைக்கும்போது அதற்கு உரிய சன்மானம் கொடுக்கப்பட வேண்டும்”
சொல்லிவிட்டு எழுந்தான். “நான் வர்றேன் சார்…”
புறப்பட முயன்றவனை கையமர்த்தினார; அந்த இயக்குனர். “தம்பி… ஒரு நிமிஷம். நீ ஆரம்பத்தில் இருந்தே சுயமரியாதையை விடக் கூடாது என்பதில் உறுதியாய் இருப்பது தெரியுது. வாட்ச்மேன் கூட உன்னைப் பத்தி அதான் சொன்னார். உன்னை சோதிக்கத்தான் அப்படி சொன்னேன். உட்கார்…”
ஆச்சரியமாய் உட்கார்ந்தான். அவர் தொடர்ந்தார். “ஆனா உனக்கு ஒரு டெஸ்ட் வைப்பேன். அதுல பாஸ் ஆனாதான் உதவி இயக்குநர் வேலை…”
‘எஞ்சினியரிங் அரியர்ஸ்சையே முடிச்சுட்டோம். அதுவும் அந்த எம் ஒன், எம் ட்டூ, எம் த்ரீ இருக்கே அதைவிடவா பெரிய டெஸ்ட் வைக்கப் போறீங்க…’ என நினைத்துக்கொண்டே அவரைப் பார்த்தான். கேளுங்க சார்.
“உன்னுடைய குறும்படங்களும் சரி, கதைகளும் சரி… திருநங்கைகள், பிச்சைக்காரர்கள், வட மாநில தொழிலாளர்கள். சாலையோர வியாபாரிகள், இப்படி பலதரப்பட்ட மனிதர்களின் பிரச்சனைகளை பேசுவதா இருக்கு. நல்லதுதான். ஆனா இதற்கு மாறாக நீ இப்போ ஒரு புது கதையை இங்கேயே எழுத வேண்டும். முடியுமா…?”
“சொல்லுங்க சார், என்ன மாதிரி கதை எழுதணும்…?”
“நான் ஒரு சூழ்நிலையை சொல்றேன். ஒரு குக்கிராமம்… ஓலைக்குடிசை வீடுகள்… ஒளிராத தெருவிளக்குகள்… அங்கு ஒரு தெருவில் நள்ளிரவில் ஒரு ஐந்து நிமிடத்தில் நடக்கிற ஒரு சம்பவம்… சஸ்பென்ஸ்… த்ரில்… க்ரைம்… கலந்து இருக்கணும்…”
“அவ்ளோதானே… எழுதிடலாம்…”
“இரு தம்பி… நீ எழுதுகிற கதையில் மனிதர்களே இருக்கக் கூடாது… இப்போ எழுது…”
திடுக்கிட்டான் குமரன்.
டீ வந்தது. இயக்குநர் சொன்னார். “பரவாயில்லை டீ குடித்துவிட்டு நல்லா யோசிச்சு எழுது… உனக்கு அரை மணி நேரம் தர்றேன்”
ஆனால் அவன் சில வினாடிகளில் யோசித்துவிட்டு எழுதத் தொடங்கினான். பதினைந்து நிமிடத்தில் எழுதி முடித்துவிட்டு, அவரிடம் நீட்டினான்.
வாங்கினார்… படித்துப் பார்த்தார்… ஆச்சரிய ரேகைகள் முகத்தில் பரவின.
************
நால்வரும் வந்து என்னை தாக்க முயன்றனர். நான் வேக வேகமாய் வீட்டின் கூரையில் ஏறிப் பதுங்கினேன். என்னை அவர்கள் தேடிக் கொண்டிருக்கும்போதே, கூரையில் மாட்டி வைத்திருந்த ஒரு கூர்மையான கத்தியை சிரமப்பட்டு தள்ளிவிட்டேன். அது நேராக அந்த நால்வரில் ஒருவர் மீது விழுந்தது. கத்திக்கொண்டே கோபமாய் என்னைத் தேடி கூரையில் தாவினார்கள். நான் கூரையில் எனது பற்களால் ஓட்டைப் போட்டு மேல்பகுதிக்கு வந்து உச்சியில் போய் உட்கார்ந்துக் கொண்டேன். அவர்கள் மேல் பகுதிக்கு வந்தால், மறுபடியும் அந்த துவாரம் வழியாக உள்ளே சென்று வலையில் பதுங்கிக் கொள்ள திட்டமிட்டுள்ளேன். அவர்களை சோர்வடையச் செய்து ஓட வைக்கிறேன் பாருங்கள்.
************
படித்துவிட்டு குழப்பமாய் இயக்குனர் கேட்டார்…
“அப்போ அந்த நாலு பேர் யாரு…? கூரை மேல் ஏறிய அது என்னது…?”
குமரன் சிரித்துக்கொண்டே ஒரே வரியில் பதில் சொன்னான்.
“நடுநிசியில் பூனைகள் நடமாட்டம்…. ஒரு எலிக்குட்டியின் பார்வையில்”
இயக்குனர் எழுந்து வந்து அவனை அரவணைத்துக் கொண்டார்…
– கதைப் படிக்கலாம் – 154