பங்கு…

– ஆரூர் சரவணா
two girls
young woman
dancing
happy
twins
joy

“சந்தானலெட்சுமி, வித்யாலெட்சுமி – பேர் எல்லாம் மங்களகரமா இருந்து என்ன செய்ய, இப்படி ஒரு நொடியில வளர்த்தவங்களை தூக்கிக் குடுத்துட்டு, எந்த ஆதரவும் இல்லாம நிக்கிதுங்களே…” என்று பேசியவரின் குரல் மிகவும் மெல்லியதாகத்தான் இருந்தது. ஆனால் கொரோனாவின் காரணமாக இறுதி சடங்கில் கலந்துக் கொள்பவர்கள் எண்ணிக்கை, சமூக இடைவெளி போன்ற காரணங்களால், அந்த இடத்தில் நிலவிய அமைதியின் காரணமாக, அந்த வார்த்தைகள் பலருடைய காதுகளிலும் தெளிவாக விழுந்தது.

ஆனாலும் அப்படி பேசியவரை யாரும் கடிந்துக் கொள்ளவில்லை. உண்மையைத்தானே சொன்னார் என்ற எண்ணம்.

சுந்தரமூர்த்தியும், லீலாவதியும் மகள்களுடன் வாடகை வீட்டில்தான் வசித்து வந்தார்கள். வீட்டு வாசலிலேயே காலையில் இட்லி வியாபாரமும், மதியம் தக்காளி, எலுமிச்சை, தயிர் சாதங்கள் தயாரித்து விற்றும் குடும்பத்தை நடத்தி வந்தார்கள்.

இவ்வளவுக்கும் சுந்தரமூர்த்தி சொத்துக்கள் எதுவும் இல்லாத ஆள் கிடையாது. திண்டுக்கல் மாவட்டத்தில் கிராமம் ஒன்றில் நிறைய விவசாய நிலங்களில் சாகுபடி செய்து வந்த பரம்பரையில் பிறந்தவர்தான் அவர்.

சுந்தரமூர்த்தியின் பெற்றோர் இருவரும் உடல்நலக்குறைவால் அடுத்தடுத்து காலமானதும், வழக்கம்போல் சொத்துக்களை அனுபவிப்பது குறித்து சகோதரர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டது.

உறவுக்காரர்கள் மற்றும் ஊர்ப்பெரியவர்கள் பேசியது எதுவும் எடுபடவில்லை.

சுந்தரமூர்த்திக்கு திருமணம் ஆகி பதினைந்து ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்காத நிலையில், அவரும் லீலாவதியும் அந்த மன வேதனையில் இருந்து வந்தார்கள். இந்தச் சொத்துக்கள் எதுவும் அவருக்குப் பெரிதாக தெரியவில்லை.

சொத்து கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி, உடலுழைப்பு செய்து பிழைக்க ஆயிரம் வழிகள் இருக்கின்றன என்ற மன நிலையில்தான் இருந்தார். ஆனால் அவர் உடன் பிறந்த சகோதரர்களில் இரண்டு பேர், நீதிமன்றத்தில் பாகப்பிரிவினை வழக்குத் தாக்கல் செய்வதில் உறுதியாக இருந்தார்கள்.

அவர்கள் குடும்பத்தில் இருந்த மொத்த விவசாய நிலங்களுக்கும் ஒரே ஒரு ஆழ்துளை குழாய் கிணறு மட்டுமே இருந்து வந்தது. பாகப்பிரிவினை வழக்கில் தீர்ப்பு வரும் வரை, அந்த பம்புசெட்டை எப்படி பங்குப் பிரித்துக் கொள்வது என்பதற்கும், தனியாக ஒரு வழக்கு தாக்கல் செய்தார்கள்.

“எனக்கு வழக்கு நடத்தி இந்த சொத்துதான் வேணும்னு வம்பு பண்ண விருப்பம் இல்லை. அதே நேரம் இந்த சொத்து வேணாம்னு சொல்லி இந்தக் குடும்பத்துக்கும் எனக்கும், எதுவும் இல்லைன்னு ஒதுங்கவும் நினைக்கலை. அதனால என்னையை வழக்குல எதிர்மனுதாரரா சேர்த்துடுங்க. கோர்ட்டுல என்ன தீர்ப்பு வருதோ வரட்டும்…” என்ற சுந்தரமூர்த்தி, அருகில் இருந்த நகரத்தில் குடியேறிவிட்டார்.

அதுவரை விவசாயம் மட்டும் செய்து பழகியிருந்த சுந்தரமூர்த்திக்கும் லீலாவதிக்கும், செய்யத் தெரிந்த மற்றொரு வேலை, சமையல் மட்டுமே. அதனால் வருமானமும் வேண்டும், நம்முடைய பசியும் அடங்க வேண்டும் என்ற எண்ணத்தில், வீட்டிலேயே சிறிய அளவில் உணவு வியாபாரத்தை செய்யத் தொடங்கினார்கள்.

சுந்தரமூர்த்தியின் உணவகத்திற்கு அடிக்கடி சாப்பிட வந்த வகையில் அவருக்குப் பழக்கமான கட்டிடத் தொழிலாளிதான், நாகராஜன். அவருக்கு ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருப்பதாக ஜோதிடர்கள் கூறியதை சுந்தரமூர்த்தியிடம் தெரிவிப்பார். ஆனால் சுக்கிரன் வழங்குவதை பணமாகவோ நகையாகவோ வழங்காமல், குழந்தைச் செல்வங்களாக வாரி வழங்கிக் கொண்டிருந்தாரோ என்றுதான் சுந்தரமூர்த்திக்கு தோன்றும்.

ஏற்கனவே மூன்று ஆண் குழந்தைகள் இருந்த நிலையில் நாகராஜன் மனைவிக்கு நான்காவதாக இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன.

விபரம் தெரிந்ததுமே சுந்தரமூர்த்தி, தனக்கு ஒரு பெண் குழந்தையை தத்துக் கொடுக்க முடியுமா என்று கேட்டார்.

நாகராஜனின் வருமானம் அவர் மது அருந்துவதற்கே போதுமானதாக இல்லை. ஏற்கனவே இருக்கும் மூன்று ஆண் குழந்தைகளின் கல்விக்கே நிறைய செலவழிக்க வேண்டும். அப்படி செலவு செய்வது வீண் போகப்போவது இல்லை. பத்து வயதைக் கடந்ததும், பகுதி நேரப் பணிக்கு அனுப்பியாவது வருமானம் பார்க்கலாம்.

ஆனால் பெண் குழந்தைகளை பாதுகாப்பாக வளர்த்து படிக்க வைத்து, திருமணம் செய்துக் கொடுத்து… நினைக்கும்போதே கண்களை இருட்டுகிறதே என்று நினைத்த நாகராஜன், “ஏன் குழந்தைங்களை பிரிக்கணும்… ரெண்டையும் சேர்த்தே எடுத்து வளர்த்துக்குங்க…” என்று கொடுத்துவிட்டார்.

நாகராஜனின் மனைவி விஜயாவுக்கு முழு சம்மதம் இல்லைதான். ஆனாலும், குடிகார கணவனிடம் தான் துன்பப்படுவது போதும்…  ஆம்பள புள்ளைங்க எப்படியும் பிழைச்சுக்குவாங்க… பொம்பளைப் புள்ளைங்களாவது நல்லா இருக்கட்டும் என்ற எண்ணத்தில், மறுப்பு தெரிவிக்கவில்லை.

அவர்களின் எதிர்பார்ப்பு பொய்யாகாத அளவுக்கு, சுந்தரமூர்த்தியும் லீலாவதியும் இரட்டைப் பெண் குழந்தைகளுக்கு சந்தானலெட்சுமி, வித்யாலெட்சுமி என்று பெயரிட்டு, நல்லவிதமாகவே வளர்த்து வந்தார்கள்.

அந்த நேரத்தில், நாகராஜனிடம் அந்த ஊரில் இருந்து தற்போது திருச்சியில் வசித்து வரும் அரசியல் சார்புடைய தொழிலதிபர், கட்டிடங்கள் கட்டும் பொறுப்பை ஒப்படைத்தார். குடிப்பழக்கம் இருந்தாலும், வேலையில் கவனமாகவும், சிறப்பாகவும் செயல்பட்டதால் பணி ஒப்பந்தங்கள் நிறைய கிடைக்க ஆரம்பித்தன.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள்ளாகவே நாகராஜனிடம் அவன் எதிர்பாராத அளவு செல்வம் சேரத் தொடங்கியது. அவனும் குடும்பத்துடன் திருச்சியில் குடியேறிவிட்டான். இதுபோல வாழ்க்கை மாறும் என்று எதிர்பார்க்காத விஜயாவுக்கு, இரண்டு பெண் குழந்தைகளையும் தத்துக் கொடுத்தது தவறோ, ஒன்றையாவது நாம் வளர்ப்பதற்காக வைத்துக் கொண்டிருக்கக் கூடாதா என்ற எண்ணம் எழுந்தது.

இதுபற்றி கணவனிடம் மெல்லப் பேச்சை எடுத்தாள்.

“இங்கப்பாரு… நான் குடிகாரன்தான்… என் பேச்சு கரடுமுரடாத்தான் இருக்கும்… ஆனா வாக்குத் தவற மாட்டேன். எதையும் எதிர்பார்க்காம அந்த பொம்பளைப் புள்ளைங்க மேல பாசத்தை காட்டி வளர்த்துகிட்டு இருப்பாங்க. இன்னைக்கு நமக்கு வசதி வந்துடுச்சுன்னு போய், புள்ளைய திரும்பக் கேட்குறது மகா பாவம்…” என்ற நாகராஜனின் பேச்சில் உறுதி தெரிந்தது.

“ரெண்டு புள்ளையையுமா கேட்குறேன்… ஒண்ணைத்தானே….”

“இது இன்னும் ரொம்ப பெரிய தப்பு… இப்போ அந்தப் புள்ளைங்களுக்கு அஞ்சு வயசு இருக்கும்… எல்லாச் செய்தியும் தெரியலைன்னாலும், ஓரளவு நல்லாவே விவரம் புரிஞ்சுக்குற வயசு… இந்த நினைப்பை மறந்துடு… வேணுன்னா இந்த ஊர்ல ஏதாவது ஒரு பொம்பளைப்புள்ளையை தத்து எடுத்து வளர்த்துக்கலாம்…”

“என் கொழந்தைங்களை திரும்ப வாங்க மாட்டீங்கள்ல… அப்ப வேற பேச்சு வேணாம்… இதை இத்தோட விட்டுடுங்க…” என்று விஜயா அந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

சந்தானலெட்சுமியும், வித்யாலெட்சுமியும் பிறந்து இரண்டே நாட்களில் மருத்துவமனையிலேயே சுந்தரமூர்த்தி – லீலாவதிக்கு தத்துக் கொடுக்கப்பட்டு விட்டதால், நாகராஜனின் மகன்களுக்கு தங்கைகளுடன் உறவாடும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

அப்படி இருந்தாலும், இப்போது விஜயா குழந்தைகளை திரும்ப வாங்கி வந்து வளர்க்கலாம் என்ற பேச்சை ஆரம்பித்ததும், மனதளவில் நம் வீட்டுக்கு தங்கை வரப்போகிறாள் என்று தயாராகி இருந்தார்கள்.

ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என்பது தெரிந்ததும், அவர்கள் மனதில் சின்ன ஏமாற்றம். அப்படியே நாட்கள் நகரத் தொடங்கிவிட்டன.

சுந்தரமூர்த்தியின் உடன்பிறந்தவர்களுக்கு, நம்மிடம் இருக்கும் குழந்தைகளில் ஒன்றை எடுத்து வளர்த்திருக்கலாமே… இப்படி யாரோ ஒருத்தரோட குழந்தையை, அதுவும் ரெண்டு பெண் குழந்தைகளை எடுத்து ஏன் வளர்க்கணும்… குடும்பச் சொத்தை யாரோ ஒரு மூணாவது நபரோட புள்ளைங்க அனுபவிக்கப் போறாங்களே என்ற மன வருத்தத்தில், பேச்சு வார்த்தையையே நிறுத்திக் கொண்டார்கள்.

குலதெய்வ கோயிலில் வருடாந்திர திருவிழாவின்போது, சுந்தரமூர்த்தி தன் குழந்தைகளிடம் உறவினர்களை அறிமுகம் செய்வார். ஆனால் அவர்கள் பேச மனம் இல்லாமல், மவுனமாகவே நகர்ந்து விடுவார்கள்.

வழக்கு நடைபெறும்போது வாய்தா நாட்களில் சுந்தரமூர்த்தி நீதிமன்றத்திற்கு செல்வது இல்லை. அதனால் அவர் தன் சகோதரர்களை நேரில் பார்ப்பதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

************

சந்தானலெட்சுமியும், வித்யாலெட்சுமியும் கடந்த ஆண்டுதான் கல்லூரியில் சேர்ந்திருந்தார்கள். இரண்டாம் பருவத்தேர்வு எழுதுவதற்குள் கொரோனா வந்து உலகையே புரட்டிப்போட்டு விட்டது. சுந்தரமூர்த்தி-லீலாவதி நடத்தி வந்த இட்லி கடைக்கு, பெருவாரியாக இருந்த வாடிக்கையாளர்கள் கட்டிடத் தொழிலாளிகளும், தினக்கூலி வேலை செய்பவர்களும்தான்.

எந்தப் பணிகளும் இல்லை என்று, எல்லா தொழிலாளர்களும் வீட்டினுள் முடங்கியதால், இவர்களின் இட்லி வியாபாரமும் சரிந்தது. ஆனால் முற்றிலுமாக படுத்து விடவில்லை. மருத்துவமனை நோயாளிகள் மற்றும் ஒரு சில நபர்களின் உணவுத் தேவையை நிறைவு செய்துக்கொண்டு, தங்கள் குடும்பத்தில் உள்ள நால்வரின் வயிற்றையும் வாட விடாமல் வைத்துக் கொண்டிருந்தார்கள்.

ஊரடங்கு தொடங்கி இரண்டரை மாதங்கள் கடந்த நிலையில், லேசான தளர்வுகளுடன் திறந்திருந்த கடைகளில், உணவகத்துக்கு தேவையான சில பொருட்களை வாங்கிக்கொண்டு சுந்தரமூர்த்தியும், லீலாவதியும் வெறிச்சோடிக்கிடந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்துக் கொண்டிருந்தார்கள்.

சாலைகள் காலியாகத்தானே இருக்கின்றன என்ற அலட்சியத்தில் அதிவேகமாக போட்டி போட்டுக்கொண்டு பைக்குகளில் பறந்த இரண்டு இளைஞர்களில் ஒருவன், கட்டுப்பாட்டை இழந்து சுந்தரமூர்த்தி ஓட்டிச் சென்ற மொபட்டின் மீது மோதியதில், இவர்கள் இருவரும் மட்டுமின்றி, மோதியவனும் அந்தரத்தில் தூக்கி வீசப்பட்டு, மூவரும் வெவ்வேறு திசையில் விழுந்தார்கள்.

விழுந்தவர்கள் எழுந்திரிக்கவே இல்லை. மழை இல்லாமல் காய்ந்திருந்த சாலைகளையும் மண் தரைகளையும், இவர்களின் ரத்தம் நனைத்தது.

சுந்தரமூர்த்திக்கும், லீலாவதிக்கும் கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவுகள் வந்ததால், அவர்களின் உடல்கள் இறுதிச்சடங்கிற்காக வீட்டுக்கு வந்தன.

அப்போது அங்கிருந்தவர்களில் ஒருவர்தான், “சந்தானலெட்சுமி, வித்யாலெட்சுமி – பேர் எல்லாம் மங்களகரமா இருந்து என்ன செய்ய, இப்படி ஒரு நொடியில வளர்த்தவங்களை தூக்கி குடுத்துட்டு எந்த ஆதரவும் இல்லாம நிக்கிதுங்களே…” என்று பேசினார்.

சுந்தரமூர்த்தி-லீலாவதியின் உடல்கள் தகனத்தை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த அவரது சகோதரர்களைப் பார்த்து, சந்தானலெட்சுமிக்கும், வித்யாலெட்சுமிக்கும் சில நொடிகள் எதுவும் புரியவில்லை.

ஆறு பாக சொத்தை இனிமே அஞ்சா பிரிச்சுக்கலாம் என்ற எண்ணத்தில் சுடுகாட்டிலிருந்து அப்படியே போயிருக்கக்கூடும் என்று நினைத்தவர்கள் முன்பு, அவர்கள் திரும்ப வந்து நின்றதும் அதிர்ச்சி ஏற்படுவது இயற்கைதான்.

ஒருவேளை, அரசும் நீதிமன்றமும் பெண் குழந்தைகளுக்கும் சொத்தில் சமபாகவீத உரிமை உள்ளது என்று மறுபடியும் வலியுறுத்தியிருப்பதால், எதற்கும் இருக்கட்டும் என்று உறவைத் தொடர விரும்புகிறார்களா… அப்பா, அம்மா இருக்கும்போதே தேடி வராதவர்கள், இப்போது ஏன் மீண்டும் வந்திருக்கிறார்கள் என்று பலவித எண்ணங்கள் இருவரிடமும் தோன்றின.

பெரியப்பா ஒருவர்தான் மவுனத்தை கலைத்தார்.

“கொழந்தைங்களா… இதுவரைக்கும் நடந்ததை மறந்துடுங்க… இந்த கொரோனா மத்தவங்களுக்கு எப்படியோ, எங்க எல்லார் கன்னத்துலயும் அறைஞ்சு புத்தி சொல்லிடுச்சு…

ஊரடங்கு காலத்துல தம்பிகிட்டயும், உங்ககிட்டயும் பேசணும்னு ஆசைப்பட்டோம்… ஆனா, மனசுல இருந்த ஈகோ, அது எப்படி நாமளா போய் பேசுறதுன்னு இறங்கி வரத் தோணலை… பேச நினைச்சதுமே பேசியிருந்தா எவ்வளவு நல்லா இருந்துருக்கும்… இப்போ அவங்க எப்பவுமே பேச முடியாத இடத்துக்கு போயிட்டாங்க…

நீங்க எப்பவுமே எங்க வீட்டு பொண்ணுங்கடா… முதல் வேளையா கேசை வாபஸ் வாங்கிட்டு, எந்த சச்சரவும் இல்லாம சொத்தை சரி சமமா பிரிக்கப்போறோம்… உங்க அப்பனுக்கு முறைப்படி கிடைக்க வேண்டிய பாகம், சேதாரம் இல்லாம உங்களுக்கு வரும்…

உங்களை தொடர்ந்துப் படிக்க வெச்சு, எல்லா செலவும் செஞ்சு நீங்க விரும்புற இடத்துல கல்யாணம் பண்ணிக் கொடுக்க வேண்டியது எங்கப் பொறுப்பு.

இப்பவே உங்களை எங்க கூட கூப்பிடலை. நீங்க உங்க பெரியம்மா, சின்னம்மான்னு யாரை இருக்க சொல்றீங்களோ… அவங்க பதினாறாம் நாள் காரியம் வரை, உங்கக் கூட இந்த வீட்டுல இருப்பாங்க… உங்க அப்பா, அம்மாவோட வாழ்ந்த இந்த வீட்டுல, நீங்க எவ்வளவு நாள் இருக்க ஆசைப்பட்டாலும் சரி… உங்க உணர்வுக்கு மதிப்புக் கொடுத்து நாங்க துணையா இருக்கோம்…” என்றார்.

இதையெல்லாம் கேட்ட சந்தானலெட்சுமிக்கும், வித்யாலெட்சுமிக்கும் ஏதோ திரைப்படங்கள், கதைகளில் நிகழும் திடீர் திருப்பங்கள் நினைவில் வந்து அலைமோதின.

பெரியப்பா சொன்னதற்கு என்ன பதில் சொல்வது என்று திகைத்துப் போய் இருந்த நேரத்தில், அவர்கள் வீட்டு வாசலில் இன்னொரு கார் வந்து நின்றது.

அதிலிருந்து இறங்கியது, நாகராஜனின் மகன்கள்.

“நியூஸ் பார்த்துட்டு ஓடி வர்றோம்… நீங்க சின்னபுள்ளையா இருந்தப்பவே திரும்ப அழைச்சுட்டு வந்து வளர்க்கணும்னு அம்மாவுக்கு ஆசை. ஆனா அந்த ஆசை நிறைவேறாமலேயே அவங்க இறந்துட்டாங்க… அப்பா, திரும்ப உங்க மேல சொந்தம் கொண்டாடுறது தப்புன்னு உறுதியா இருந்தார்.

இப்போ இந்த சூழ்நிலையில நாங்கப் பாசம் காட்ட, தங்கைகள் கூட இருக்கணும்னு நினைக்கிறோம்… ஏதோ ஆதரவில்லாம நீங்க நிக்கிறதால நாங்க அனுதாபத்துல உதவி செய்யுறதா நினைக்க வேண்டாம்…

அப்பா சம்பாதிச்ச சொத்துலயும், இப்போ அதை வெச்சு நாங்க வளர்த்துக்கிட்டு இருக்குற சொத்துலயும், உங்களுக்கு சரிபங்கு எடுத்துக்குங்க… படிப்பு முடிஞ்சதும் உங்களுக்கு விருப்பம் இருந்தா, நம்ம தொழில்லயும் நீங்க ஈடுபடலாம்… எல்லாம் உங்க விருப்பம்தான்…” என்று படபடவென சொல்ல நினைத்ததை கொட்டிவிட்டார்கள்.

காலையில் பெற்றோர் இறந்ததும், இனி நாம இந்த உலகத்துல எப்படி வாழப்போறோம் என்று கலங்கி நின்ற லெட்சுமிகளுக்கு, தற்போது போட்டிப்போட்டு அன்பு செலுத்த தயாராக இருக்கும் வளர்ந்த வீட்டு சொந்தங்களையும், பிறந்த வீட்டு சொந்தங்களையும் பார்த்து, நெகிழ்ச்சியில் பேச வார்த்தைகள் கிடைக்காமல் நின்றவர்களின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

– கதைப் படிக்கலாம் – 130

Exit mobile version