– காயத்ரி சுப்பிரமணியன்

காலை உணவு உண்டுச் சென்று, தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள் முத்துமணி… கூப்பாடுப் போட்டு கொண்டுதான் இருநாள் விடுமுறை முடிவுறும். அவளுக்கு ஏற்றதுபோல அவள் தோழிகளும் ஊரையே வலம் வருவார்கள். உச்சிப் பொழுதாகியும் வீடு திரும்பவில்லை. அவள் நெருங்கிய தோழியோ வீட்டுக்குச் செல்வோம் என்கிறாள். இல்லை இல்லை நான் வரவில்லை… சாப்பிட அம்மா அழைப்பாள், இல்லையேல் அப்பா அழைப்பார் என கொண்டாட்டமாக விளையாடிக் கொண்டிருந்தாள்.
தோழியின் பாட்டி கடைக்குப் போயி வெத்தலைப் பாக்கு வாங்கி வரச்சொல்லி, 20 ரூபாய் கொடுத்து அதிலே இருவரும் ஐந்து ரூபாய்க்கு தீனி வாங்கிக்கோங்கனு அனுப்பி வைத்தாள். கடைக்குச் சென்ற நந்தினியும், முத்துமணியும் ரோட்டில் செல்லும்போதே இவ்வளவு உனக்கு… இவ்வளவு எனக்கு… என போட்டிப் போட்டு கொண்டே சென்றனர்.
கடைக்குச் சென்று வெத்தலை வாங்கிக்கொண்டு வேகமாக வீடு திரும்பினர். நந்தினி பாட்டியிடம் வெத்தலையைக் கொடுத்தனர். பாட்டியோ தீனி வாங்கிக் கொண்டீர்களாவென வினவினாள். ம்… என முனவிக்கொண்டு விளையாட ஓடினார்கள்.
அவர்கள் கடைக்குச் சென்று திரும்பும் வரை, எவரும் வீட்டிற்குச் செல்லாமல் விளையாடிக் கொண்டிருந்தனர். முத்துமணியின் நெருங்கிய தோழிகளுள் நந்தினியும், கௌரியும் முத்துமணியை தனியே விட்டு இருப்பதே இல்லை.
உச்சிப்பொழுது மறையும் நேரமாச்சு. இன்னும் மதிய சோறு சாப்புடலனு, கௌரியின் அம்மா திலகா சாப்பிடக் கூப்பிட்டாள். திலகா கூப்பிடுவதைப் பார்த்துக் கொண்டிருந்த நந்தினி அம்மாவும், நந்தினியை அழைத்தாள். இருவரும் சாப்பிட்டு வருகிறோம். நீயும் போயி சாப்பிடென சென்றனர்.
அங்கு விளையாடி கொண்டிருந்தப் பிள்ளைகளுடன் விளையாடுவோமென தனக்குள்ளே நினைத்துக்கொண்டு விளையாடுபவர்களையே வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தாள், முத்துமணி.
நந்தினியையும், கௌரியையும் அழைத்ததுப்போல் ஒவ்வொரு பிள்ளைகளின் அம்மாக்களும் அழைத்தனர்.சாப்பிட்டு திரும்பவும் விளையாட வந்தனர் நந்தினியும், கௌரியும். அவர்களைப் போன்றே எல்லோரும் சாப்பிட்டு வந்து விளையாடத் தொடங்கினர்.
இதுவரைக்கும் அம்மா சாப்பிட கூப்பிடவில்லையென நினைத்த முத்துமணி, சோர்வாக நானும் போய் சாப்பிட்டு வருகிறேனென புறப்படுகிறாள். வீட்டில் போய் பார்க்கிறாள். கதவில் பூட்டு தொங்கியது…
முத்துமணி, சரி அம்மா வேலைக்குப் போயிட்டாங்க. அதனாலதான் நம்மள சாப்பிட கூப்டலனு நினைத்துக்கொண்டு, அம்மி ஓரமாக வைத்திருக்கும் சாவியை எடுத்து திறந்து சாப்பிட நினைக்கிறாள்.
பின்பு முகம் கழுவி வந்து சோற்றுப்பானையைப் பார்க்கிறாள். ஏதோ அரை வயிறு நிறையுமளவுக்கு சோறு இருக்கு. அதற்கு ஏற்ற குழம்பு இல்லை. உடனே வறுத்த மிளகாயை வைத்துச் சாப்பிட்டுவிட்டு, தனது வீட்டருகில் இருக்கும் வேப்பமரத்தில் விளையாடிக் கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்திற்குள் தோழிகள் இருவரும் வந்தனர். மூவரும் விளையாடத் தொடங்கினர். தூரத்தில் முத்துமணி அப்பா, சாராயம் குடித்துவிட்டு எப்பப்பாரு விளையாட்டுனு, பக்கத்து வீட்டுக்காரரிடம் கொடுத்திருந்த அருவாளை வாங்கிக்கொண்டு, போதையில் தன் பிள்ளையை அடிக்கத் துரத்தினார்.
அதில் நந்தினியோ யாரையாவது அழைக்கச் சென்றுவிட்டாள். கௌரியும், முத்துமணியுமே ஓடினர். போதையில் இருந்தாலும் முத்துமணியை அடிக்க முடிவெடுத்தவர், தடுமாறியும் பிடிக்க நினைக்கிறார். பொழுது இருட்டுகிறதென கூறிக்கொண்டே இருவரும் ஓடினர்.
முத்துமணியின் அத்தை ரோட்டோரமாக கூட்டமாக பேசிக்கொண்டு இருந்தாள். கௌரி முத்துமணியிடம் கூப்பிட்டுக் காட்டும் வேளையில், சோளார் மின்விளக்கு எரிய முத்துமணியை சத்தமிட்டு அழைத்தாள் அத்தை ஜெயா. திரும்பிப் பார்த்து ஜெயாவை நோக்கி இருவரும் சென்றனர். முத்துமணி அப்பா துரத்தியதைச் சொல்கிறாள்.
அதற்குள் தடுமாறி கொண்டே முத்துமணியை சத்தமிட்டு அழைத்தவாரே ஓடி வருகிறான் மூர்த்தி. ஜெயாவிடம் புடிப்புடினு சொல்ல ஜெயா இருவரையும் ஓடச் சொல்கிறாள். மேலத்தெரு நோக்கி ஓடுகின்றனர். அந்தப் பக்கமெல்லாம் ரோட்டோர மின்விளக்கும் எரியவில்லை. நிலா வெளிச்சத்திலே ஓடுகின்றனர். பயப்படாதனு சொல்லி, எனக்குத் தெரிஞ்ச பாட்டி வீடு இருக்குனு கூட்டிப்போகிறாள், கௌரி.
சிறுகுடிசை வீட்டுல கதவு இல்லாம நியாயவிலை கடையில் கொடுக்கும் சேலையே, நிலையில கட்டிருக்கு. உள்ளப் போயி பார்த்தாள். பாட்டி ஓரமாக தூங்கிட்டு இருக்க, அதற்குப் பக்கத்தில அழுகிற சத்தம் கேட்கிறது. இதக் கேட்ட கௌரியும், முத்துமணியும் பயப்படுகின்றனர்.
கொள்ளப்பக்கப் படியில் பாட்டியின் மருமகள்… பாவத்த வாங்குறது இந்த கிளவினு பக்கத்து வீட்டுக்கார பெண்கள் சிலரோடு முணுமுணுக்கிறாள். பாட்டியை எழுப்பினால் அத்தை திட்டுவாளென, இருவரும் பாட்டியின் பக்கமாக இருக்கும் குடத்தில் தண்ணி குடிச்சிட்டு, தொடி கயிற்றில் இருக்கும் பாட்டி சேலையை எடுத்து போர்த்திக் கொண்டு உறங்க முற்பட்டனர்.
அவ்வேளையில் முத்துமணி அம்மாவும், ஜனதாவும் முத்துமணியையும், கௌரியையும் கூப்பிடும் சத்தம் கேட்கிறது. இருவரும் பாட்டி வீட்டிற்குள் இருப்பது தெரியாத அத்தையவள், சேலையை யாரைக் கூப்பிட்டுக்கொண்டு செல்கிறீர்களென கேட்கிறார்.
முத்துமணி அப்பா முத்துமணியை போதையில் துரத்தினாரென, ஜெயா வேலைக்குச் சென்று வீட்டிற்கு வந்தவுடன், வந்து சொன்னாளென கூறினாள், முத்துமணி அம்மா.
தன் அம்மா குரலைக் கேட்டதும், கௌரியை அழைத்துக்கொண்டு வெளியே போயி தன் அம்மாவின் முழங்காலை இருக்கக்கட்டி கொண்டு அழுகிறாள். இதனைப்பார்த்த பாட்டியின் மருமகள் நிலையாக நிற்கிறாள்.
இங்கத்தானே இருந்தேன். எப்டி டி… வந்தீங்கனு கேட்டுக்கொண்டே, அழைச்சிட்டுப் போங்க புள்ளையே… கெரங்கி இருக்கானுச் சொல்லி கெளப்பிவிடுகிறாள். பின்பு ஜெயாவும், முத்துமணி அம்மாவும் இருவரையும் அழைத்துச் செல்கிறாள்.
ஜெயா வீடு வந்தவுடன் வாரே, புள்ளைகள பாத்து கூட்டிப்போங்க அண்ணினு சொல்லிச் செல்கிறாள். வீட்டிற்கு அழைத்து வரும் வேளையில் நானும் வீட்டுக்கு போறேனு கௌரி சொல்ல, வேணா வேணா இங்க சாப்பிட்டு தூங்குனும்… காலையில போலாம்னு, தன் பிள்ளைகளுக்கு வாங்கி வந்த தோசையையும் திண்பண்டங்களையும் கொடுத்து சாப்பிடச் சொல்லி தூங்க வைக்கிறாள்.
மறுநாள் காலையில் மூர்த்தியை, முத்துமணி அம்மா திட்டோதிட்டு திட்டினாள். மூர்த்திக்கு இது ஒன்னும் புதிது இல்லை. முத்துமணி அம்மா திட்டியதை காதில் வாங்காதது போல, வேப்பங்குச்சியை மென்றவாறே நின்றான் முத்துமணி அப்பா.
இந்தக் கதை என் கனவும், கற்பனையும், சில நிகழ்வுகளும்…
அதனால் வீம்புக்காரியின் சிறுகனவில் விளைந்தக் கதை… சில பெண்களின் வாழ்க்கையை கூறும் கரிய விதை …..
– கதைப் படிக்கலாம் – 118
இதையும் படியுங்கள் : சிகரம் தொடுவாய்…