சுழல்…

– ஐ. கிருத்திகா
old lady
alone woman
stone bench
park

பன்னீர்ப்பூக்கள்  உதிர்ந்துக்  கிடந்தன. உதிர்ந்த  பூக்களில்  அநேகம்,  ஷூக்களில்  மிதிபட்டு  நசுங்கின. அவள்  எச்சரிக்கை  உணர்வோடு  காலடி  எடுத்து  வைத்தாள். மற்ற  இடங்களில் வேகமாக  நடப்பவள் அங்கு நடையை மெதுவாக்கினாள்.

அப்படியும் சில சமயம் காலை வைக்கப்போய் தடுமாறி வெடுக்கென இழுத்துக்கொண்டாள். ஓரிருவர் பார்த்துச் சிரித்தனர். வட்டமான நடைபாதையில் ஆங்காங்கே ஸ்டோன் பென்ச் போடப்பட்டிருந்தது.

அதில்  சிலர்  அமர்ந்துச்  சொல்லக்கூடாத  ரகசியங்களை  பேசுவது  போல,  சன்னமாக  பேசிக்கொண்டனர். நாலைந்து  சுற்றுகள்  நடந்து  முடித்த  சிலருக்கு  லேசான  மூச்சிரைப்பு  ஏற்பட,  உடன்  வந்தவர்களிடம்  பேசுவது  போல  நடைப்பயிற்சிக்கு  இடைவெளி  கொடுத்தனர். அவள்  பத்து  சுற்றுகள்  முடித்திருந்தாள். ஒரு  சுற்றுக்கு  மூன்று  நிமிடம்  வீதம்  பத்து  சுற்றுகளுக்கு  முப்பது  நிமிடங்கள். பத்தாவது  சுற்று  முடிக்கும்போது,  கடைமையை  நிறைவேற்றிவிட்டது  போன்ற  ஆசுவாசம்  உண்டாகும்.

அவள்  அசோக  மரத்தினடியில்  கிடந்த  அந்த  ஸ்டோன்  பெஞ்சில்  அமர்ந்தாள். கைப்பேசி  சிணுங்கிற்று. வழக்கமாய்  பேசும்  மகனும், அவனைத்  தொடர்ந்து  பேசும்  மகளும், எப்போதும் போல  விசாரிப்புகளுடன்  முடித்துக்கொள்ள, கைப்பேசியை  அணைத்து  பைக்குள்  போட்டுக்கொண்டாள். பார்க்கில்   கூட்டம்  குறையத்  துவங்கியிருந்தது. அவள்  கைகளை  குறுக்காக  கட்டி,  மறைந்து  கொண்டிருந்த  சூரியனை  வெறித்தபடி  எழுந்துப் போக  மனமில்லாதவளாக  அமர்ந்திருந்தாள்.

வட்டவடிவ  நடைபாதையின்  நடுவில், பச்சைப் பசேலென   லான் விரிந்திருந்தது. அதில் சில குருவிகள்  தத்தி விளையாடின. வலது ஓரத்தில் நின்றிருந்த பாதாம்  மரத்தில் இரு அணில்கள்  ஒன்றையொன்று  துரத்திக்கொண்டிருந்தன. அவள்  மெதுவாக  எழுந்தாள். மடியிலிருந்து  தவறி  விழுந்த  கைப்பையை  எடுத்து  இறுக  அணைத்தபடி  நடக்கத்  துவங்கினாள். நசுங்காமல்  கிடந்த  பன்னீர்ப்  பூவொன்று  கண்ணுக்குத்  தென்பட, குனிந்து  அதை  எடுத்து  உள்ளங்கைக்குள்  பத்திரப்படுத்திக்கொண்டாள்.

இரண்டு  நிமிடம்  நடந்து  பார்க்கின்  பின்பக்க  கேட்  வழியாக  வெளியே  வந்தாள். பார்க்கை  ஒட்டியிருந்தப்  பேருந்து  நிறுத்தத்தில்  கூட்டம்  அதிகமிருந்தது. நிறுத்தத்தின்  அருகிலேயே  ஒரு  பெரிய  வாகை  மரம்  நின்றிருந்தது. வெயிலொழுகும்  பகல் பொழுதில்,  வாகை  மரத்தினடியில்  தாராளமாக  நிழல்  கொட்டிக்கிடக்கும். நிழலுக்கு  குளுமையின்  அடர்த்தி  அதிகம். அதை  உணர்ந்த  சில  நாய்கள், அங்கு  சுகமாக  கண்ணயர்ந்திருக்கும்.

அவள்  மரத்தையொட்டி  நின்றுக்கொண்டாள். அங்கு சீருடை அணிந்து கும்பலாக நின்றிருந்த சிறுமிகள் மேல் பார்வை பதிந்தது. பேருந்து வரும் திக்கை நோக்கி நொடிக்கொருதரம் பார்த்தப்படி அவர்கள் அடிக்குரலில் சிரித்து பேசிக் கொண்டிருந்தனர்.

காதில் விழுந்த செய்தியில் தலையும் புரியவில்லை, வாலும்  புரியவில்லை. இருந்தும் சுவாரசியமாக இருந்தது. அவர்கள்  அடுத்தடுத்து வந்து நின்ற பேருந்துகளில் தொற்றிக்கொள்ள, நிறுத்தம்  ஓரளவு காலியானது. அவள் அதற்குமேல் அங்கு நிற்க  விருப்பமில்லாதவளாக நடக்கத் தொடங்கினாள். கடலை  வண்டிக்காரன்,

“கடலை  சாப்பிடுறீங்களாம்மா…..?” என்று கேட்டபோது தலையசைத்து மறுத்துவிட்டு நடந்தவளுக்கு அவித்த  வேர்க்கடலையின் வாசம் நாசியை நெருடியது. நல்ல நெத்து, நெத்தான கடலைகள்.

குவித்து வைக்கப்பட்டிருந்த கடலையின் மேலெழுந்த ஆவி அந்தப் பக்கம் சென்றவர்களை சுண்டியிழுக்க, அவளுக்கு எதுவும்  தோன்றவில்லை. ஜீப்ரா கிராஸிங்கில் சாலையைக் கடக்கச் சிலர்  நின்றுக் கொண்டிருந்தனர். அவள், அவர்களோடு சேர்ந்துக்கொண்டாள். வாகனங்கள் செலுத்தப்பட்ட அம்புபோல விரைய, ஒரு  போலீஸ்காரர் அவைகளை நிறுத்திக் கூட்டம் போக வழி செய்தார்.

அவள் போலீஸ்காரருக்கு நன்றி தெரிவித்துவிட்டு மெதுவாக சாலையைக் கடந்தாள். நடைமேடை சற்றே உயரமாக இருந்தது. தம் பிடித்து ஏற வேண்டியிருந்தது. மெதுவாக ஏறியவள் ஒதுங்கி நின்று,  கைப்பைக்குள் கையை விட்டு, செல்போனை  எடுத்தாள். ஏழெட்டு  குறுஞ்செய்திகள் வந்திருந்தன. ஒவ்வொன்றையும் வாய்விட்டுப்  படித்தாள். எதுவுமே தனக்குத் தேவையில்லாததாக, கொஞ்சம் புரியாததாகவுமிருந்ததில் அவ்வளவையும் நீக்கினாள்.

அருகிலிருந்த டீக்கடையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. டீ மாஸ்டர் கிளாஸை உயரேத் தூக்கி ஆற்றுவது  சாகசக்காட்சி போல் தோன்ற, அவள் கண்ணிமைக்காது பார்த்தபடி நின்றிருந்தாள். சிலர் வடையைக் கடித்தப்படி டீயை உறிஞ்சினர். ஒருவர் பாட்டிலுக்குள்  கையைவிட்டு கேக்கை எடுத்து டீயில் நனைத்து தின்றார்.

டீ கிளாஸ் கழுவுமிடத்தில் ஏகப்பட்ட ஈக்கள் மொய்த்தன. கடைக்காரன் அவளை கவனித்துவிட்டு, “ஏதாவது வேணுமாம்மா……?” என்றான்.

“இ…. இல்ல. வேண்டாம்……” என்றவள் மெதுவாக நடக்க ஆரம்பித்தாள்.

கையிலிருந்த பன்னீர்ப்பூ நிறமிழந்து வாடியிருந்தது. அதை நடைபாதையை ஒட்டியிருந்த காம்பவுண்டுக்கு அந்தப் பக்கம்  வீசியபோது, உள்ளே  குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பது  தெரிந்தது. அவள் விரிந்தக் கண்களோடு அதைப் பார்க்க  ஆரம்பித்தாள்.

நான்கு குழந்தைகளும் பந்தை காலால் எத்தி விளையாடிக் கொண்டிருந்தனர். அடர்ந்த பசும்புல்வெளித் தரையில் வெள்ளைச்  சீருடையுடன் அவர்கள் ஓடியது முயல் குட்டிகளின் துள்ளலை  ஒத்திருந்தது. அவளையுமறியாமல் இதழில் புன்னகை அரும்பியது. அவள் அங்கு வெகுநேரம் நின்றிருப்பதைக் கண்ட வீட்டின்  வாட்ச்மேன் அருகில் வந்தான்.

“இங்கே என்னம்மா பண்ணிக்கிட்டிருக்கீங்க……?”, சற்று அதட்டலாகக்  கேட்டான். அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

“ஒ……..ஒண்ணுமில்ல…. சும்மாதான்……”

“இங்கேயெல்லாம் நிக்கக்கூடாதும்மா. போங்க…….போங்க…….”

முகத்தை கடுமையாக்கி, கையை நீட்டிப் போகச் சொன்னான்.

அவளுக்கு அவமானமாக இருந்தது. சுற்றுமுற்றும் பார்த்தாள். யாரும் தன்னைக் கவனிக்கவில்லை  என்பதை அறிந்தப்பிறகு,  கொஞ்சம்  நிம்மதியாகயிருந்தது. அவள் சேலை முந்தானையை இழுத்துப்  போர்த்திக் கொண்டு நடையை எட்டிப்போட்டாள்.

வலதுபக்கம் சீப்பின் பற்கள் போல வரிசையாக தெருக்கள். இரண்டாவது குறுக்கு சந்து, மூன்றாவது, நான்காவது குறுக்கு  சந்துகளைத் தாண்டி, ஐந்தாவது குறுக்குச்சந்தில் அவள் நுழைந்து  நடந்தாள்.

வரிசையாக ஃபிளாட்டுகள் நிறைந்திருந்த தெருவில், ஒரேயொரு  இஸ்திரி வண்டி நின்றிருந்தது. இஸ்திரி வண்டிக்காரன் குனிந்த தலை நிமிராது துணிகளுக்குப் பெட்டிப் போட்டுக்கொண்டிருந்தான்.

அவன் காலுக்குக் கீழே துணிகளடைத்த கட்டைப்பைகள் குவிந்துக்  கிடந்தன. வண்டியில், ஒரு ஓரத்தில்  பெட்டி  போடப்பட்டத் துணிகள்  அடுக்கப்பட்டிருந்தன. அதில் ஆரஞ்சு வண்ண போச்சம்பள்ளிப்  புடவையும், கரு நாவல் பழ  நிறத்தில் பட்டுப்புடவையும், அடர்ந்த  சிவப்பில் மைசூர் சில்க் புடவையும் இருந்தது அவளைக் கவர்ந்தது. மூன்றும் அவளுக்குப் பிடித்த நிறங்கள்.

வெகு நேர அலசலுக்குப் பிறகு, அவளுடைய தேர்வு அம்மூன்று  நிறங்களில் ஒன்றாகத்தானிருக்கும். அவள் நின்றிருப்பதை  எதேச்சையாக கவனித்த இஸ்திரி வண்டிக்காரன் வேகமாக  சொன்னான்.

“அந்த வூட்டம்மாவுக்கு எப்பவும் அவசரந்தான். கடேசி நேரத்துல  கொண்டாந்து குடுத்துப்புட்டு, இன்னும் முடியலியா, முடியலியான்னு  நச்சரிக்கும். இப்பகூட ஊர்ல ஒரு விசேசத்துக்குப் போவணுமாம். பத்து நிமிசத்துல  பண்ணிக்  குடுத்துடுன்னு சொல்லிட்டுப்  போயிருக்கு. எனக்கென்னா பத்து கையா இருக்கு, பாஞ்சு, பாஞ்சு  பொட்டிப்போட…….”

அவனின் புலம்பலுக்கு அவள்  தலையாட்டினாள். அவனுக்குச் சற்று  ஆறுதலாயிருந்ததுப் போலும்.

“வந்ததுலேருந்து ஒரு நிமிசம் உட்காரல. பொட்டிப்  போட்டுக்கிட்டேயிருக்கேன். காலையில மூணு இட்டிலி புட்டுப்  போட்டுக்கிட்டு வந்ததோடு சரி. மத்தியான சோறு திங்கல. இன்னும்  ரெண்டு வூட்டு துணிகளை தேய்ச்சிட்டுதான் சோறு திங்கணும்.”

அவன் பேசுவதை நிறுத்திவிட்டு, வேலையில் கவனமானான். அவள் அங்கிருந்து நகர்ந்தாள். கடந்துச் சென்ற ஆட்டோ ஒன்று அவள்மேல் புகையை உமிழ்ந்துவிட்டுச் சென்றது. அடுத்த ஐந்து நிமிடத்தில் அவள் மறுபக்க தார்சாலைக்கு வந்திருந்தாள். வாகனங்கள் முகப்பில் இரு வெளிச்சப்புள்ளிகளோடு விரைந்தன. தெருவும், சாலையும் இணையும் வலதுபக்கம்  ஒரு  பிள்ளையார் கோவிலிருந்தது.

சிறு மாடம் போல அந்தக் காம்பவுண்டு சுவரிலிருந்த பிள்ளையார்  கோவிலில் நாலைந்து பெண்கள் நின்றிருந்தனர். அர்ச்சகர்  பிள்ளையாருக்கு வஸ்திரம் கட்டிவிட்டு கற்பூரம் காட்டினார். அவள்  கன்னத்தில் போட்டுக்கொண்டாள்.

“நாளைக்கு சங்கடஹரசதுர்த்தி. நம்ம ரமணி சார் அபிஷேகத்துக்கு  கொடுத்திருக்கார். எல்லாரும் சரியா ஏழு மணிக்கு வந்துடுங்கோ….”

அர்ச்சகர் விபூதி தந்தப்படியே கூற, அவளுடைய தலை  தன்னிச்சையாக அசைந்தது. பைக்குள் துழாவி  அகப்பட்ட  நாணயத்தை தட்டில் போட்டுவிட்டு ஓரமாய் விட்டிருந்த  செருப்புகளை அணிந்துக்கொண்டு அவள் நடந்தாள். இருள்  அடர்த்தியாய் பரவியிருந்தது. சாலையோர விளக்குகள் வெளிச்சம் தெளித்துக் கொண்டிருந்தன. வாகன இரைச்சலின் டெசிபல் அளவு கூடிப்போயிருந்தது. அவளுக்கு  கால்களில் அயர்வு கூடிற்று. வலியும் கூட. தொண்டை வறண்டு  போயிருந்தது.

வெகுநேரமாக தண்ணீர் குடிக்காதது ஞாபகத்துக்கு வர, பைக்குள்ளிருந்து பாட்டிலை எடுத்து வாயில் சரித்துக் கொண்டாள். தண்ணீர் சூடாக இருந்தது. சுவையற்று சப்பென்றிருந்த நீர், அவள் முகத்தில் சுளிப்பை உண்டாக்கிற்று. அவள் பாட்டிலைப் பைக்குள் போட்டு, கடந்துப்போன ஆட்டோவைக் கைதட்டிக் கூப்பிட்டாள்.

வட்டமிட்டு வந்து நின்ற ஆட்டோவில், கேட்ட தொகைக்கு இசைந்து ஏறி அமர்ந்துக்கொண்டாள். அடுத்த பதினைந்தாவது நிமிடம், ஆட்டோ ஃப்ளாட் வாசலில் நின்றிருந்தது. பணத்தைத் தந்து ஆட்டோவிலிருந்து இறங்கியவள், புதிதாய் பார்ப்பது போல் தெருவைப் பார்த்தாள். குல்மொகரும், மயில் கொன்றையும் கொட்டிக்கிடந்த தெருவில், இருபக்கமும் ராட்சச உருவில் மரங்கள் நின்றிருந்தன. அடர்ந்த கிளைகளின் ஊடே வானம் எட்டிப்பார்க்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தது. வழுவழுத்த தார்ச்சாலையில் பணக்கார செழுமை மின்னியது. பெரும், பெரும் பங்களாக்களின் வாயில் கதவில் தங்க எழுத்துக்களில் பெயர்கள் மின்னின. அவள் லிஃப்டில் பயணித்து, நான்காவது மாடிக்கு வந்தாள். காரிடார் அமைதியில் அமிழ்ந்துப் போயிருந்தது.

கிரானைட் பதிக்கப்பட்டத் தரையில் ஒரு காலடிச்சுவடில்லை. அவள்  இடுப்பில் சொருகியிருந்த சாவியை எடுத்து, லாக்கில் பொருத்திய போது, எதிர் ஃப்ளாட் பாப் தலை பெண்மணி கதவைத்திறந்து ஹாய் என்றாள்.

தலையசைக்கும் முன் கதவு சாத்தப்பட்டது. அவள் வீட்டிற்குள்ளே வந்து விளக்கை உயிர்ப்பித்தாள். அங்கு திரண்டிருந்த அமைதியின் அடர்த்தி கூடிப் போனது போலிருந்தது. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் அமைதி, சூன்ய வெளிக்கு இட்டுச் செல்வது போன்று அவளுக்கு பிரமை உண்டானது.

சங்கிலியின் தொடர்ச்சியான கண்ணிகள் போல் அமைதியின் நாட்கள் முடிவற்று, நீண்டு கொண்டே போயின. உஷ்ணமேறிய பகல் பொழுதில் தலைக்கு மேலே சுழலும் மின் விசிறியின் மெல்லொலி அமைதியை கிழித்துப் போட்டதென்னவோ வாஸ்தவம்தான்.

இருந்தும், அதிலொரு அந்தகாரம் நிறைந்திருந்தது போன்ற உணர்வில் அவள் நடுங்கினாள். ஓரோர்சமயம் பொறுக்க முடியாது பாய்ந்து சென்று  மின்விசிறியை நிறுத்தினாள். வியர்த்து  கொட்டும் பின்மதியப் பொழுதுகளில், ஏசியின் குளிர்த் தழுவல் இதமாய் இருந்தப்போதும் வெகுநேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

வயோதிக உடம்பில் குளிரின் பரவல் உபாதைகளை விளைவிக்க ஏ.சி.யை நிறுத்தி, மின்விசிறியை சுழல விட்டாள். பின் அதை நிறுத்தினாள். இதற்கும், அதற்குமான அலைக்கழிப்பில் அவள் தவித்துப்போனாள்.

அவள் திரைச் சீலைகளை விலக்கி விட்டு, ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள்.

வானத்தில் நட்சத்திர துணுக்குகள் மின்னின. அவள் விரல் நீட்டி நட்சத்திரங்களை எண்ண ஆரம்பித்தாள். ஒன்று, இரண்டு,  மூன்று…….பத்து, பதினைந்து……… நட்சத்திரங்கள் சுற்றி சுழன்றன.

எண்ணிய நட்சத்திரத்தைத் திரும்ப எண்ணினாள். ஒவ்வொன்றும் மற்றொன்றின் சாயல் கொண்டிருந்ததில் குழப்பம் உண்டானது. அவள் அயர்ந்துப் போனாள். எண்ணுவதை கைவிட்டு, நாற்காலியில் சரிந்தாள். வீடு முழுக்க அமைதி ததும்பி வழிந்தது. சுவரில் இருந்த குடும்ப போட்டோவில் அவள், கணவர், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் சிரித்துக் கொண்டிருந்தனர்.

– கதைப் படிக்கலாம் – 144

Exit mobile version