– ஸரோஜா சகாதேவன்

காப்பாத்துங்க…. காப்பாத்துங்க…. அய்யோ! என்ன கொல்றானே…. குழம்பில் உப்பு சற்று அதிகமாகப் போட்டுவிட்ட மனைவியைத் தாக்கும் கணவனை எதிர்க்க முடியாமல், ஓங்கி கத்தும் பெண்ணின் குரல் – ஒரு வீட்டில்.
“”ஏ பண்ணாட… பொறம்போக்கு… சம்பாதிக்கற பணத்தை மொத்தமா சாராயக் கடையில குடுத்துட்டு வர்றவனுக்கு, தினம் தினம் மீனும் கறியுமா ஆக்கிப் போட, உங்கப்பமூட்டு களஞ்சியமா கொட்டிக் கெடக்கு? ரெண்டு புள்ளைங்க வயித்த நெரப்பவே நானு அல்லாடிக்கிட்டிருக்கேன். உனக்கு வக்கனையா நாக்கு கேட்குதா…?”
வீதியில் நின்று விரிந்த கூந்தலை வாரி முடிந்துக் கொண்டே கணவனைத் திட்டிக்கொண்டிருக்கும் மனைவி – இன்னொரு வீட்டில்… திடீர் காலனியில் இரவு நேரம் வீதியில் எதிரொலிக்கும், வீடுதோறும் நடக்கும் ரகளை நாடகங்கள். தன் வீட்டில் வயிரெல்லாம் புண்ணாகி நீராகாரம் மட்டும் உள்ளே போக, அரைகுறை நினைவில் படுத்திருக்கும் தன் தந்தையைப் பார்க்கிறான் மாணிக்கம்.
தெனம் தெனம் இந்தக் கொடுமைங்கள பாத்துக்கிட்டிருக்க என்னால் முடியல.. படிக்க முடியாமல் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை வீசி எறிந்துவிட்டு வெளியேறினான்.
சற்று தூரத்தில் இருந்த பெரிய அடுக்ககத்தில் தன் படுக்கையறையிலிருந்து பாதி போதையில் எழமுடியாமல், தன் கடூரக்குரலில் கத்துகிறார் எஸ்.ஐ மாறன். எவண்டா அவன்? கதவ தட்டறது….. எழுந்து வந்தேன்னா… எலும்பு தூளாயிடும்….. போங்கடா…
டியூஷன் முடிந்து இரவு வீடு திரும்பிய ராகேஷ், தன் படிப்பு குறித்த முக்கியச் செய்தியைக் கூட தந்தையிடம் பகிர்ந்துக்கொள்ள முடியாமல், அறையின் வெளியே நின்று கொண்டிருந்தான்.
வேகமாக அவன் கையைப் பிடித்து இழுத்துச் சென்ற தன் தாயை முறைத்தவன், “ஏம்மா அப்பான்னு ஒருத்தர் இருக்காருங்கறதே எனக்கு மறந்துப்போயிடும் போல இருக்கு. காலையில நான் ஸ்கூலுக்கு போரவரைக்கும எழுந்திருக்க மாட்டார். நான் எப்பதான் அவருகிட்ட பேசறது? பொங்கிய கண்ணிரைத் துடைத்துக் கொண்டான்!”
வகுப்பில் மௌனமாக அமர்ந்திருந்த மாணிக்கத்தை கவனித்துக் கொண்டே பாடம் நடத்திக் கொண்டிருந்தார், அறிவியல் ஆசிரியை தமிழ்ச்செல்வி. நன்றாகப் படிக்கும் மாணவன் மாணிக்கத்தின் முகத்தில் தெரிந்த வெறுமையை கவனித்த ஆசிரியை, “மாணிக்கம்! நீ பாடத்தை கவனித்த மாதிரி தெரியலையே! உன் கவனமெல்லாம் எங்கேயோ இருக்கிற மாதிரி இருக்கு. நான் இப்போது சொல்லிக் கொடுத்த தியரியை நீ விளக்கிச் சொல் பார்க்கலாம்”… மாணிக்கத்தை எழுப்பிய ஆசிரியைக்கு பதில் கூறாமல் கண்களில் கண்ணீர் முட்டி வர அமைதியாக நின்றுக்கொண்டிருந்தான் மாணிக்கம்.
“மேம் அவன் அப்பாவுக்கு உடம்பு சரியில்லேன்னு வந்ததிலிருந்து அழுதுக்கிட்டே தான் இருக்கான்.” அருகில் அமர்ந்திருந்த பாபு கூறினான்.
அக்கறையுடன் அவன் தந்தையைப் பற்றி விசாரித்த ஆசிரியை அவனைத் தேற்றினார். “எனக்குத் தெரிந்த போதை மறுவாழ்வு மையம் இருக்கு. அங்கு அவரை முழுமையாக சரிசெய்து விடலாம்.” மாணிக்கத்திடம் ஆதரவாகப் பேசி நம்பிக்கை அளித்த ஆசிரியை, வயித்தியம் செய்யும் பொறுப்பையும் தானே ஏற்றுக்கொள்வதாக உறுதி அளித்தார்.
ஆசிரியை தமிழ்ச்செல்வியின் அக்கறையைப் புரிந்துக்கொண்ட மற்ற மாணவர்கள், ஒவ்வொருவராகத் தங்கள் தந்தையின் மதுப் பழக்கத்தை நிறுத்தும் வழி கேட்க, அறிவியல் வகுப்பு மாற்று திசையில் சென்றுக் கொண்டிருந்தது.
தொடர்ந்து குடிப்பது அல்லது குறுகிய காலத்தில் அதிகம் குடித்தாலோ, ரத்தத்தில் ஆல்கஹால் நச்சுத்தன்மை (alcohol poisoning) அதிகமாகி, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். போதை மறுவாழ்வு மையங்களில் சரியான மருத்துவம், மனநல மருத்துவர்கள் தொடர்ந்து தரும் கவுன்சிலுங்கும், நோயை குணப்படுத்துவதுடன் குடிகாரர்களுக்கு குடிமீது வெறுப்புண்டாக்கி, மீண்டும் குடிப்பதைப் பற்றி நினைத்துக்கூட பார்க்க மாட்டார்கள்.” – இதுபோன்ற செய்திகளை மாணவர்களுக்கு விளக்கினார்.
வகுப்பில் பாதி மாணவர்கள் தங்கள் கவலையை ஆசிரியையிடம் கூச்சமின்றி பகிர்ந்துக் கொண்டபோது, தமிழ்ச்செல்வியின் மனதை ஆயிரமாயிரம் முட்கள் ஒன்று சேர்ந்து தைப்பதைப் போன்ற வலியை உணர்ந்தார்.
அடுத்தநாள் ஆசிரியை துணையோடு மாணிக்கத்தின் தந்தையை மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஒரு வாரமாகத் தன் மதுக்கடையின் வருமானம் குறைந்து வருவதன் காரணம் தெரியாமல், மதுக்கடை முதலாளி மார்த்தாண்டன் தவித்துக் கொண்டிருந்தான்.
அந்தக் கடை சரக்குல விஷப்பொருள் கலந்திருக்கு என்றும், அதை குடித்த மாணிக்கங்கற பையனின் அப்பா இறந்துட்டார் என்றும், செய்தி பரவிக் கொண்டிருந்ததைக் கேள்விபட்ட மார்த்தாண்டன் கொதித்துப் போனான். தன் நண்பன் காவல் அதிகாரி மாறனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டான்.
“ஏம்ப்ப்பா… எங்கக் கடைய பத்தி எவனோ பொறளி கெளப்பிட்டிருக்கான். பத்து நாளா மளமளன்னு வேபாரம் சரிஞ்சுப் போச்சி. பொறளி கெளப்பினவன் யாருன்னு கண்டுபிடிச்சி முட்டிய தட்டி உள்ளே போடு…
“பதறாதே….நானும் கேள்வி பட்டேன். கூடிய சீக்கிரம் கண்டு பிடிச்சிடறேன்” – வழக்கமான காவலர் மொழியில் வந்த பதிலைக் கேட்டதும், கோபத்துடன் தன் கைப்பேசியை அணைத்தான் மார்த்தாண்டன்.
குடித்திருக்கும்போது நினைவு தடுமாறி தள்ளாடி நடப்பது, சாலையில் மற்றவர்கள் ஏளனமாய் பார்க்கும் அளவுக்கு ஆடை விலகி வீழ்ந்து கிடப்பது, வீட்டில் குழறியபடி மனைவி மக்களுடன் சண்டை போடும்போது கோணலாகிப்போன முக அசைவுகள் – என்று ஒவ்வொருவரின், ஒவ்வொரு நிலையும் புகைப்படமாக எடுக்கப்பட்டது.
எப்பொழுது யார் எடுத்தார்கள் என்பது தெரியாமல், குடிகாரர்களின் புகைப்படங்கள் நோட்டீசாக ஊரெல்லாம் பரவிக் கொண்டிருந்தன.
போதையின்றி இருக்கும்போது தங்கள் புகைப்படத்தைப் பார்த்து வெட்கப்பட்டவர்கள் சீற்றம் கொண்டனர். அந்தக் கோபத்தை சாலையின் நடுவில் நின்று கத்தி தீர்த்தனர். அந்தப் பகுதியே அல்லோகலப்பட்டுத் கொண்டிருந்தது.
ஒவ்வொரு வீட்டிலும் தங்கள் குழந்தைகளால் குடிகாரத் தந்தைகள் ஒதுக்கப்பட்டார்கள். “குடிச்சிரிக்கறப்ப நீ நாத்தம் அடிக்கற. எனக்கு வாந்தியா வருது. நீ எங்கக் கிட்டேயே வராதே.” – என்று நான்கு வயது சிறு குழந்தை கூட தன் தந்தையை விட்டு ஒதுங்குவதைக் கண்டு, அதன் தகப்பன் பயந்துப் போனான்.
வழக்கமாக சனிக்கிழமை கூட்டம் அதிகம் இருக்கும் மதுக்கடையின் முன்னால், மாணவர்கள் பட்டாளமும் பெண்களுமாக கூட்டமாக அமர்ந்து விட்டனர்.
என் தந்தையை இழந்துவிட நான் அனுமதிக்க மாட்டேன். எனக்கு தந்தை வேண்டும். குடும்பத்தை சிதைக்காதே – போன்ற பதாகைகளுடன் மாணவர்கள் கோரசாக குரல் கொடுத்துக் கொண்டிருந்தனர். கடையை மூட வேண்டும் என்று பெண்கள் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர்.
மது வாங்க வருபவர்களின் பிள்ளைகளே, தன் தகப்பனின் கையைப் பிடித்து, “அப்பா நீங்க எனக்கு வேண்டும்ப்ப்பா…. தயவு செய்து குடிக்காதீங்க…. திரும்பி போங்கப்பா…” கண்ணீரோடு கெஞ்சி கேட்டுக் கொண்டிருந்தனர்.
“குடிக்கலேனா நான் செத்துப் போயிடுவேன்” என்று உடல் நடுங்க தடுமாறிக் கொண்டிருந்தவர்களை, இரண்டு மாணவர்கள் குண்டுகட்டாகத் தூக்கிச் சென்று, தூரத்தில் நின்றிருந்த ஆம்புலன்ஸ் வண்டியில் திணித்தனர். அவர்களைப் போதை மறுவாழ்வு மையத்துக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை, நான்கு மாணவர்கள் எடுத்துக் கொண்டனர்.
காவலர்கள் அதிரடியாக அங்கிருந்தவர்களை அடித்துத் துரத்த முயன்றனர். அங்கு ஜீப்பிலிருந்து இறங்கிய காவல் அதிகாரி, அந்தக் கூட்டத்தில் இருந்தவர்களைப் பார்த்தவுடன் சட்டென தன் வண்டியில் ஏறி அங்கிருந்து அகன்றார். போகும் முன் யாரையும் அடித்து விரட்டாம கூட்டத்த கலைந்து போகும்படி அமைதியாகப் பேசிப் பாருங்கள் என்ற அறிவுரை தந்துவிட்டு வேகமாகக் கிளம்பினார்.
“மார்த்தாண்டா! உன் கடைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்யறவங்கள அடித்தெல்லாம் விரட்ட முடியாது. அங்க உன் மனைவியும், என் மகனும்தான் முன்னின்று நடத்தராங்க. அதோட அங்க இருக்கிறவங்க எல்லாம் பள்ளி மாணவர்களாகவே இருக்காங்க. போதாக்கொறக்கி ஆசிரியர்களும் அவங்களுக்கு துணையா நின்று வழி நடத்தறாங்க. சேரி பசங்க, சிண்டு முண்டுல இருந்து, பெரிய இடத்துப் புள்ளைங்க எல்லாருமா சேர்ந்து பாகுபாடில்லாம போராட்டத்த நடத்திக்கிட்டிருக்காங்க. எப்படி டீல் பண்றதுண்ணே தெரியல.. பேசாம ரெண்டு நாளைக்கு உன் கடைய இழுத்துப் பூட்டு. வேற வழியே இல்லே…”
தன் நண்பன் காவல் அதிகாரியின் பேச்சைக் கேட்டு மார்த்தாண்டன் எரிமலையாக வெடித்தான். வேறு வழியில்லாமல் கடை மூடப்பட்டது.
மாணிக்கத்தின் தந்தை சிகிச்சைக்குப் பிறகு தெளிவான மனிதனாகத் திரும்பி வந்தார். அவரைப் பார்த்த பெண்கள், தங்கள் கணவன்மார்களையும் திருத்தி விடலாம் என்ற நம்பிக்கையோடு போராடிக் கொண்டிருக்கின்றனர். மார்த்தாண்டனின் மனைவி, தமிழ்ச்செல்வி ஆசிரியையும், மாணிக்கத்தின் தந்தையும், போராட்டத்தை தொடர்ந்து வழி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இருண்ட வீடுகளில் வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவ ஆரம்பிக்கிறது.
– கதைப் படிக்கலாம் – 141
இதையும் படியுங்கள் : வத்திய மார்புகள்