மன்னிப்பாயா…!

– பா. சுபானு

மருத்துவர் திடீரென இப்படியொரு குண்டை தூக்கிப்போடுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. “பேஷண்ட் குடிச்சு, குடிச்சு உடம்பை கெடுத்துக்கிட்டாருமா… கல்லீரல் கெட்டுப் போச்சு. உடனடியா கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யணும். பத்திலிருந்து, பதினைந்து லட்சம் செலவாகலாம். உடனே ஏற்பாடு பண்ணுங்க. இல்லைன்னா… பேஷண்டை காப்பாற்றுவது சிரமம்…” ஒரு செய்திபோல சுலபமாக சொல்லி விட்டு போய்விட்டார்.

ஆனால், ஒரு பெண்ணாக…. சீனுவின் மனைவியாக…. என்னால் அதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. பதினைந்து வருட தாம்பத்தியம்… ஒரு மகன், ஒரு மகள் அதன் அடையாளம்… இதுதான் எங்கள் குடும்பச் சொத்து. பூவையும், பொட்டையும் காப்பாற்ற பத்து லட்சம் வேண்டும். அத்தனை பணத்தை நினைக்கவே நெஞ்சு பதறியது.

“வாம்மா… அப்பாவைப் போய் பார்க்கலாம்…” சாதனா கூப்பிட்டாள்.

கல்லூரிக் காலம் தொட்டே குடித்து வந்திருக்கிறார். “நல்லப் பையன், எந்த கெட்டப் பழக்கமும் இல்லை…” எனத் தரகர் சொன்னதை நம்பியே, அப்பாவும் என்னை அவருக்கு கட்டிக் கொடுத்தார். நல்ல மனுஷன் தான். கல்யாணமான புதிதில், ஆறுமாதம் போல குடிக்காமல் இருந்தார். பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்தார். என்மீது அவர் கொண்டிருந்த ஈர்ப்பு குறைந்து விட்டிருந்தது.

மது குடித்துவிட்டு எனக்குப் பயந்து இரவு தாமதமாக வீடு வந்தார். என் கண்டிப்பும், கோபமும் கொஞ்ச நாட்கள் அவரை குடிக்காமல் வைத்திருந்தது. ஆனாலும், அவரால் மதுவை முற்றிலுமாக  ஒதுக்க முடியவில்லை. ருசிகண்ட பூனையாக, வார இறுதி நாட்களிலும், விசேஷ நாட்களிலும் குடித்து வந்தார்.

குடிப்பதை தவிர, அவரிடம் வேறெந்த கெட்டப் பழக்கமும் இல்லை. குடிப்பதே கெட்ட பழக்கம்தான் என்பது போகப்போக தெரிந்தது. நண்பர்களோடு சேர்ந்து குடிப்பதை, ஒரு தினசரி கடமையாக்கிக் கொண்டார். சாப்பாடு, சைடிஷ் என அவர்களுக்கும் இவரே சேர்த்து செலவு செய்ததில், வீட்டுச் செலவுகளுக்கு வரும் பணம் குறைந்துபோனது.

அதிலும் சாதனா கருவுற்றிருந்த போது, மருத்துவரிடம் சென்று காண்பிக்கக்கூட பணமின்றி அழுதிருக்கிறேன். சில ஸ்கேன்களுக்கு என் வளையல்களையும், தோடையும் அடகு வைத்திருக்கிறேன்.

தலைப்பிரசவம் தாய் வீட்டில் பார்த்துவிட்டார்கள். மறு பிரசவம் இவர்தானே பார்க்க வேண்டும்?… ஆனாலும், என் வீட்டில் உதவாமல் இல்லை. முதல் பிரசவம் சுகப் பிரசவமாக இருக்க, மறு பிரசவம் குறித்த நாட்களுக்கு பிறகும் டெலிவரியாகமல் தள்ளிப்போக, சிசேரியன் செய்ய வேண்டியதாயிற்று. எக்கச்சக்க செலவு.

“என்னால் முடிந்தது இவ்வளவுதான்…” என ஐயாயிரம் ரூபாயை கொடுத்தார். மீதத்திற்கு மறுபடியும் நகையை அடகு வைத்து சமாளித்தேன். அவற்றில் பல நகைகள் திருப்ப முடியாமல், ஏலம் போனது.

அவருக்கும் வயதான தாய், தகப்பன்… அவரது சம்பளத்தை எதிர்பார்த்து நோய், நொடியோடு வாழ்ந்தார்கள். இவர் எதையும் உணராமல், வழக்கம்போல குடித்தார்.

சாதனா பிறந்ததும் கஷ்டம் சூழ்ந்தது. எல்லோரும் அவளையே கரித்துக் கொட்டினார்கள். அம்மாவின் சிசேரியனுக்கும்… அப்பாவின் குடிக்கும்… அவளென்ன செய்வாள் பாவம்? தங்கமகளாக வளர வேண்டியவளை, எல்லோரும் தரித்திரம் என சொன்னார்கள். பாவப்பட்ட அவளை நான் மட்டும் பாசத்தால் அணைத்துக்கொண்டேன்.

குடித்தாலும், அவர் என்னிடம் கோபப்பட்டு நடந்து கொண்டதே இல்லை. ஒரு வார்த்தை தப்பாக பேசியதில்லை. மகளை தூக்கி கொஞ்சுவார். மகனை தூக்கி கொஞ்சுவார். மது வாசனை பிடிக்காமல் இருவரும் விலகி ஓடுவார்கள்.

கண்டிப்பும், கோபமும் பயனில்லாமல் போக…. கெஞ்சிப் பார்த்தேன். என் கெஞ்சலும் பலிக்கவில்லை. சம்பள பணம் முழுக்க குடிக்கே செலவிட்டு வந்தார். ஒரு கட்டத்தில் அதுவும் பத்தாமல், கடன் வாங்கி குடித்திருக்கிறார். நாலுமாத வட்டி பாக்கி என சிலர் வீடு தேடி வந்தார்கள். அதிர்ச்சியாக இருந்தது.

மகளுக்கு ஆசையாய் வாங்கிய கொலுசையும், அம்மா வீட்டில் அவள் காதுகுத்துக்குப் போட்ட செயினையும், தோடையும் விற்று கடனை அடைத்தேன். “ப்ளீஸ்… தயவு செஞ்சு யாரும் அவருக்கு கடன் கொடுக்காதீர்கள். இனி கடன் அடைக்க, விற்க என்னிடம் எந்த பொருளும் இல்லை…” கெஞ்சினேன்.

அவர் அவராகவே இல்லை. குடிக்காமல் கைகள் நடுங்கின. நிதானம் இழந்தவராய் காணப்பட்டார். வேலைக்குச் செல்ல மறந்தார். குடியை மறக்க சிகிச்சை எடுக்க தொடங்கினோம். எதற்கும் அவர் ஒத்துழைக்கவில்லை. அவர் மீதான வருத்தமும், கசப்பும், கோபமும் என்னையும் மாற்றியிருந்தது.

எதற்கெடுத்தாலும் யார் மீதாவது எரிந்து விழுந்தேன். நிம்மதியும், மகிழ்ச்சியும் போன இடம் தெரியவில்லை. குடும்பத்தை காப்பாற்ற நானே வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பி.எஸ்.சி. படித்து இருந்தாலும், படித்ததுக்கெல்லாம் வேலைத் தேட முடியவில்லை. தவறி விழுபவன் பற்றிக் கொள்ள, ஏதேனும் சிறு கொடியாவது கிடைக்காதா எனத் தவிப்பதுபோல, ஒரு ஸ்கூலில் சொற்ப சம்பளத்தில் டீச்சராக பணியை ஏற்றுக் கொண்டேன்.

” டீச்சர்… உங்க ஹஸ்பண்ட் குடிகாரரா?” என அவர்களும் வெகு விரைவிலேயே தெரிந்துக்கொண்டு கேள்வி கேட்டார்கள்.

” டீச்சர்… உங்க கணவர் சாக்கடையில் விழுந்து கிடக்கிறார். சீக்கிரம் போங்க…” என்பார்கள்.

அழுதபடியே ஓடுவேன். பன்றிகள் சுற்றி நிற்கும் அந்த இடத்தை அடைந்து, அவரை ஆட்டோவில் தூக்கி போட்டு, வீட்டுக்கு கொண்டு வருவதற்குள் மானமே போயிருக்கும். உயிரை விடலாம் போலிருக்கும். வெறுப்பின் உச்சத்தில் அவரை காலால் மிதித்திருக்கிறேன். பிறகு கோபம் தணிந்து, உதைத்த அவர் காலை தொட்டு கும்பிட்டிருக்கிறேன்.

என் சொற்ப சம்பளத்தில் குடும்ப நடத்தவே சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், டாக்டர் இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடுவார் என எதிர்பார்க்கவில்லை. அழுகை, அழுகையாக வந்தது. கடவுள் ஏன் தான் நம்மை இப்படி சோதிக்கிறாரோ……. என அவர்மீது கோபம் கொண்டேன்.

என் நிலை தெரிந்து மாதாமாதம் செலவுக்கு பணம் அனுப்பிவிடும் அப்பா, இந்த மாதம் பணம் அனுப்பவில்லை. பாவம்! அங்கே அவருக்கு என்ன கஷ்டமோ? ஒரு போன் செய்து விசாரிக்கக்கூட மனம் வரவில்லை. பேசினால், என் கஷ்டம் தெரிந்து கொள்வார்கள். மேலும், அவர்கள் மனம் கஷ்டப்படும். ஒற்றை மகளின் கண்ணீர் அவர்களை கலங்கடிக்கும்.

பேசிக் கஷ்டப்படுத்துவதை விட, பேசாமல் இருந்து விடலாம் என முடிவெடுத்தேன். என் நிலைமையை சொல்லியிருந்தால், இந்நேரம் மாப்பிள்ளையை பார்க்க ஓடி வந்திருப்பார்கள். சொல்லி கஷ்டப்படுத்த விரும்பவில்லை. ஆனாலும், அப்பாவுக்கு எப்படியோ விஷயம் தெரிந்து ஓடிவந்தார். அவரால் எதுவும் உதவ முடியாததை சொல்லி அழுதார்.

வேலைக்கு போவதா? இவரை கவனிப்பதா? ஒன்றும் புரியவில்லை. அவரின் அம்மாவும் என்கூட மருத்துவமனையில் இருந்தார். ஆனாலும், எல்லாவற்றிற்கும் என்னையே தேடினார். அவரின் அப்பாவுக்கு நாலடி நடந்தால் மூட்டுவலியும், மூச்சடைப்பும் வந்துவிடும். அவரால் அவர் வேலையை பார்ப்பதே சிரமமாய் இருந்தது. உதவிக்கு யாரும் இல்லை.

பணம்… பணம்…பணம்…. அதுதான் இப்போதைய தேவையாயிருந்தது…

பார்க்கும் எல்லோரிடமும் பிச்சைக்காரியாக கையேந்தினேன். கடன் கேட்டேன்.

” வேலைக்கு சேர்ந்து மூணு மாசம்தான் ஆகுது. அதுக்குள்ள கடன் கேட்கறியேம்மா…” முதலாளி சிடுசிடுத்தார்.

“இதுக்கெல்லாம் கடன் கொடுத்தா, திரும்ப எப்படி வாங்குவே?” முதுகுக்குப்பின் சிலர் பேசினார்கள்.

” பாவம் பொட்டபுள்ள! கஷ்டப்படுது… கொடுக்கிறதுக்கு நம்மகிட்ட கண்ணீரைத் தவிர வேற ஒன்றுமில்லையே…” சிலர் இப்படி சொன்னார்கள்.

“மறக்காதே.. மாரியாத்தாவை நினை…” சிலர் இப்படியும் சொன்னார்கள்.

ஆனால், பலரும் பணம் என்று கேட்டதும் கை விரித்தார்கள். சொந்தங்கள் எல்லாம் தொடர்பு எல்லைக்கு வெளியே ஓடிப்போனார்கள்.

அங்கே இங்கே கடன் வாங்கியதில், ஒரு லட்சம் கூட தேரலை. அதுவும் மருத்துவமனையின் சில்லறை செலவுகளுக்கே சரியாய் போயிற்று.. இன்னும் பத்து லட்சத்துக்கு நான் எங்கே போவேன்?

மருத்துவமனையின் உள்ளே நுழைந்தாலே அதற்கு பணம் கட்டு. இதற்கு பணம் கட்டு என நச்சரித்தார்கள். பணமில்லாமல் பத்து நிமிடம் கூட நகர்த்த முடியாது போலிருந்தது.

ICU-விலிருந்த அவரைப் பார்க்க உள்ளே நுழைந்தோம். அறை குளிர்ந்து இருந்தது. மருத்துவ உபகரணங்களின் சத்தத்தோடு, மருந்து வாசனைகளும் நாசியை எட்டியது. அவர் அருகே உட்கார்ந்தேன்.

“அப்பா நம்மையெல்லாம் அசிங்கப்படுத்தறார்மா. எனக்கு அவரை பிடிக்கலை. நான் மருத்துவமனைக்கு வரமாட்டேன்…” என நவின்  சொல்லிவிட்டான். நானும் கட்டாயப்படுத்தவில்லை.

சாதனா மட்டும், “அப்பா எப்பம்மா கண்விழிப்பார்?” – எனக் கேட்டாள்.

“தெரியலையே..” என்ற நான், அவர் கண்விழிக்க காத்திருந்தேன்.

டாக்டர் ரவுண்ட்ஸ் வந்தார். எங்களைப் பார்த்தார்.

“பேஷண்ட் இன்னும் அபாயக் கட்டத்தைவிட்டு தாண்டலை. ஆபரேஷனை உடனடியா பண்ணணும். பணத்தை ரெடி பண்ணுங்க…” எனச் சொன்னதோடு, தற்காலிகமாக ஐயாயிரம் ரூபாய்க்கு மருந்து எழுதிக் கொடுத்துவிட்டுப் போனார்.

நான்படும் சிரமங்களையெல்லாம், அவர் அம்மா அவருக்கு எடுத்துச் சொல்லி இருப்பார்கள் போல… மயக்கத்திலிருந்து கண் விழித்தவர், என் கண்ணீரை பார்த்ததும் கலங்கினார். சிரமப்பட்டு பேசினார்.

“ரொம்ப தப்புப் பண்ணிட்டேன் வசந்தி. சாதாரண குடிதானே என்ன பண்ணிடும்னு நெனச்சேன். நமக்கெல்லாம் எந்த நோயும் வராது என தைரியம் கொண்டிருந்தேன்… குடிச்சேன்…. இப்போ…? ” அழுதார்……

“நானும் பல இடத்துல கடன் கேட்டுப் பார்த்துட்டேன். கிடைக்க மாட்டேங்குது. குடிகார புருஷன நம்பி கடன் வாங்கறியே, திரும்ப எப்படி கட்டுவே? எனக் கேட்கிறார்கள். அவசரத்துக்கு அடகு வைக்கக்கூட எந்த நகையும் கிடையாது. அதனால வீட்டை விற்க ஏற்பாடு பண்ணிட்டேன். நம்ம அவசரம் தெரிஞ்சு அடிமாட்டு விலைக்கு கேட்கிறான். பரவாயில்லை. நீங்க பிழைச்சு வந்தாபோதும். இல்லேன்னா எல்லோருமா சேர்ந்து விஷம் குடிக்கலாம். ஒண்ணா சாகலாம்…” என் கையறு நிலையை நினைத்து அழுதேன்.

“எல்லாம் இந்த பாழாப்போன குடியால்தானே? நானும் கெட்டு, குடும்பத்தையும் சீரழித்து, தேவதையாய் வளர வேண்டிய பெண்ணுக்கும் உனக்கும்…. குடிகாரனின் மனைவி மகள் என… கெட்டப்பெயர் கொடுத்து… நினைக்கவே கூசுகிறது வசந்தி.

எனக்காக வீட்டையும் விற்றுவிட்டால், நாமெல்லாம் நடுத்தெருவுக்கு வந்துவிடுவோமே… ஒரு குடும்பத் தலைவனாய், என் கடமைகள் இனிதானே நிறைய இருக்கிறது. அதையெல்லாம் இவ்வளவு நாளாய் உணராமல் இருந்துவிட்டேனே… இன்னும் சில வருடங்கள் கழித்து வீட்டை விற்றால், மகளுக்கு கல்யாணம் முடிக்கலாம். மகனுக்கு ஏதேனும் தொழில் வைத்துக் கொடுக்கலாம். இப்போதே விற்று என்னை காப்பாற்றி என்ன ஆகிவிடப்போகிறது? ஒரு குடிகாரனை திருத்தி விட்டோம் என்ற பெருமையா? வேண்டாம் வசந்தி…

எனக்காக நீங்க சாகக்கூடாது. எனக்காக நீங்கள் அழக்கூடாது. எனக்கு எந்த மருத்துவமும் பார்க்க வேண்டாம். என்னை சாக விடு. என்னால்தானே உங்களுக்கு இந்த அவலம்? நானே எல்லாவற்றுக்கும் சேர்த்து தண்டனை அனுபவித்து விடுகிறேன். அந்த வீடு மட்டும்தான் நான் தரும் சொத்தாக இருக்கிறது. இன்னும் கொஞ்சநாள் வெளியே இருந்திருந்தால், அதையும் விற்றுக் குடித்திருப்பேன். நீங்க செய்யவேண்டியதெல்லாம் என்னை மன்னிப்பதும், மரணிக்க விடுவதும்தான்…” என்றார்…..

இதுதான் அவர்…..

இவ்வளவு நாள் அவரை எங்களிடமிருந்து பிரித்து வைத்தது, குடிதான்.

ஆசையாக கட்டிய வீடு, அம்மா பாலூட்டி வளர்த்த உடம்பு, பார்த்த வேலை, சம்பாதித்து சேர்த்த சொத்து, எல்லாம் கரைந்து ஜீரோவாகி, மீண்டும் வாழ்க்கையை முதலிருந்து தொடங்குவதென்பது எளிதான செயலா? வளர்ந்து நிற்கும் மகளுக்கு நிழலாக இருக்க வேண்டிய நான், இப்படி விழுந்து கிடக்கிறேனே வசந்தி?… எல்லாம் அந்த பாழாய்ப்போன குடியால்தானே?” அழுதார்…

கேட்டுக்கொண்டிருந்த சாதனா, “இனிமே குடிக்காதீங்கப்பா… அம்மா பாவம். ரொம்ப கஷ்டப்படறாங்கனு…” சொன்னாள்.

“சரிம்மா…” என்றவர், சாதனாவை அருகே அழைத்து, நெற்றியில் முத்தமிட்டார்.

வீட்டை விற்று, டிரீட்மெண்ட் முடித்து, திரும்பி வந்த சில மாதங்களில், மதுவுக்கு எதிராக கோஷமிட்டபடியும், விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்யவும் போனார்…. சந்தோஷமாக இருந்தது….  எங்களைப்போல் மற்ற குடும்பங்களும் தடுமாறி தத்தளிக்கக் கூடாதில்லையா?

– கதைப் படிக்கலாம் – 18

இதையும் படியுங்கள் : ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும்

Exit mobile version