கர்நாடக அமைச்சர் நாகேந்திரா திடீர் ராஜினாமா!

வால்மீகி கழக நிதி முறைகேடு விவகாரம்; மீண்டும் அமைச்சரான 25 நாள்களில் பதவி விலகல்

கர்நாடக அரசின் திட்டமிடல் மற்றும் புள்ளியியல் துறை அமைச்சர் பி.நாகேந்திரா தனது அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.


மகரிஷி வால்மீகி பட்டியல் பழங்குடியினர் மேம்பாட்டுக் கழக நிதி முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் அழுத்தம் அதிகரித்த நிலையில் இந்த முடிவு வெளியாகியுள்ளது. பெங்களூருவில் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த நாகேந்திரா, தனது அமைச்சர் பதவியை தானாக முன்வந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.


தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், இந்த விவகாரத்தால் தனது கட்சித் தலைமைக்கு தர்மசங்கடம் ஏற்படக்கூடாது என்பதற்காக பதவி விலகுவதாக தெரிவித்தார்.
நாகேந்திராவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. மேலும் இந்த விவகாரத்தை முன்வைத்து செப்டம்பர் 1 முதல் ராய்ச்சூர் முதல் பல்லாரி வரை போராட்டப் பேரணி நடத்தவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன.


நாகேந்திரா ஏற்கெனவே இதே விவகாரத்தில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில், மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டு 25 நாட்களே ஆன நிலையில் தற்போது இரண்டாவது முறையாக பதவி விலகியிருப்பது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version