
சினிமா வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாகக் கூறி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் நடிகர் விஜய் பாபு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள சினிமாவில் பிரபல நடிகரான விஜய் பாபு, படங்களையும் தயாரித்து வருகிறார். பிலிஃப்ஸ் அண்டு தி மங்கி பெண் என்கிற குழந்தைகளுக்கான படத்தை தயாரித்தற்காக கேரள அரசின் மாநில விருதை வென்றுள்ளார்.
இந்நிலையில் சினிமா வாய்ப்பு தருவதாக கூறி நடிகர் விஜய் பாபு, தன்னை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததாகவும் பல நாட்கள் கொடுமைப்படுத்தி வந்ததாகவும் இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் 13-ம் தேதி முதல் ஏப்ரல் 14-ம் தேதி வரை விஜய் பாபு தன்னை உடல்ரீதியாக தாக்கினார், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என பாதிக்கப்பட்ட பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து சமூகவலைதளங்களிலும் இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண் குரலெழுப்பியுள்ளார்.
