இந்தியாவில் கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தை எட்டியுள்ள நிலையில், நேற்றைய நிலவரத்தை விடவும் இது 90 சதவீதம் அதிகம் என மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் ஒரேநாளில் 2,183 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. நேற்றைய பாதிப்புடன் இதை ஒப்பிடும் போது 90 சதவீதம் அதிகமாகும்.
அதேசமயத்தில் 1,985 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இன்று மட்டும் 214 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் தற்போது 11,542 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மத்திய சுகாதாரம் தெரிவித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதுகுறித்து துணை நிலை ஆளுநர் அனில்பை ஜால் தலைமையில் நாளை மறுநாள் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இதற்கிடையில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள மாநிலங்களில் குறிப்பிட்ட வகையில் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என தகவல்கள் தெரியவந்துள்ளன.