அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் ஒரு ராஜாளி போல நின்றிருந்தது, ஏர் இந்தியாவின் போயிங் 787 ட்ரீம்லைனர். வேலைக்காகவும், படிப்பிற்காகவும், சுற்றுலாவிற்காகவும் வந்தவர்கள் என ஒருபுறம், சொந்த மண்ணிற்கு ஓரெட்டு போய் வந்து விடலாம் என லண்டனில் குடியுரிமை பெற்ற இந்தியர்கள், லண்டனில் வசிக்கும் மகன், மகள் உள்ளிட்ட தங்கள் சொந்தங்களைக் காணப் புறப்பட்டவர்கள் ஒரு புறம் என 242 கனவுகளைச் சுமந்து கொண்டு உறுமலுடன் புறப்பட்ட ட்ரீம்லைனர் சரியாக ஐந்து நிமிடத்தில் விழுங்கி நொறுங்கி உருக்குலைந்து தான் சுமந்து சென்றவர்களையும் கரிக்கட்டைகளாக மாற்றி விட்டது. 8,200 மற்றும் 1,100 மணி நேரங்கள் விமானத்தை இயக்கிய அனுபவம் வாய்ந்த இரண்டு விமானிகளுடன், பாதுகாப்பான பயணத்திற்கு உத்திரவாதம் அளிக்கும் போயிங் விமானம் மண்ணோடு மண்ணாகிப் போய்விட்டது.
12ந் தேதி மதியம் 1.38 மணிக்கு லண்டனை நோக்கிய பயணத்தைத் தொடங்கிய ட்ரீம்லைனர் 1.43க்கு 425 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தது. விமான நிலையத்தில் இருந்து 15கி.மீ தொலைவில் இருக்கும் மெகானி எனும் ஊரில் விழப் போகும் முன் அங்கிருந்த ஒரு கட்டிடத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது. அது மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதியாகும். மதிய உணவு இடைவேளை என்பதால் மருத்துவ மாணவர்கள் அப்போது உணவருந்திக் கொண்டிருந்தனர். இரவு 11 மணி தகவலின் படி அங்கு படித்த 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல உயிர்களைக் காக்கும் கனவுகளோடு படித்துக் கொண்டிருந்த பயிற்சி மருத்துவர்களின் கனவு முழுமையடையும் முன்னே கருகி விட்டிருக்கிறது.
விபத்து நடந்த இடத்திற்கு மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வீரர்கள், உள்ளூர்வாசிகள் எனப் பலரும் மீட்புப் பணியில் ஈடுபட 90 பேர் அடங்கிய தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் சற்று நேரத்தில் வந்து சேர்ந்தது. இத்தனை பேர் சேர்ந்தும் மீட்க முடிந்தது என்னவோ எரிந்து போன சடலங்களைத்தான். லண்டன் வரை செல்வதற்காக நிரப்பப்பட்டிருந்த எரிபொருள், விமானத்தின் முழு எடை, விழுந்த இடம் என எல்லாம் ஒன்று சேர நிலைமை கைமீறிப் போய்விட்டது என உலகம் உணரத் தொடங்கியது. இங்கிலாந்து அரசர் சார்லஸ் முதற்கொண்டு, பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் முர்மு, ராகுல்காந்தி, முதலமைச்சர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்பட பல்வேறு நாட்டின் பிரதமர்களும், அரசியல் தலைவர்களும் தங்கள் இரங்கலையும் அனுதாபங்களையும் பகிரத் தொடங்கினர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியிலிருந்து புறப்பட்டு, அகமதாபாத் விரைந்தார். விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்தார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தோடு ஒட்டுமொத்த தேசமே நிற்பதாக உறுதியளித்தார். இன்று அகமதாபாத் செல்லும் பிரதமர் மோடி விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட இருக்கிறார்.
விமானத்தில் பயணப்பட்ட பலரைப் பற்றிய முழுமையான தகவல்கள் இன்னும் வந்து சேராத நிலையில் ரமேஸ் விஸ்வாஷ்குமார் எனும் பயணி சின்னக் காயங்களுடன் உயிர்தப்பியது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அவர் அமர்ந்திருந்த 11ஏ என்ற இருக்கை அவசரகால வழிக்கு அருகில் இருந்திருக்கிறது. விமானம் அசம்பாவிதத்திற்கு உள்ளாகப் போகிறது என விமானிகள் அறிவித்தவுடன் தயாரான விஸ்வாஷ், கட்டிடத்தில் மோதியதில் விமானத்தில் பிளவு ஏற்பட அதன் வழியே குதித்து தப்பியிருக்கிறார். அவர் உடன் பயணித்த அவருடைய சகோதரர் பற்றி இன்னும் தகவல் இல்லை.
ராஜஸ்தானைச் சேர்ந்த பிரதிக் ஜோஷி லண்டனில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். தன் மனைவி, சிறுவயது தனது மூன்று குழந்தைகளுடன் லண்டனில் செட்டிலாகி விடும் முடிவோடு பயணிக்க மொத்தக் குடும்பமும் விபத்தில் பலியாகி இருக்கிறது.
விமானத்தின் கேபினில் பணியாற்றும் நகந்தோய் சர்மாவுக்கு 20 வயதாகிறது. மணிப்பூரைச் சேர்ந்த அவருடைய செல்போனுக்கு குடும்பத்தார் அழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அது ரிங்காகிக் கொண்டே இருக்கிறது எடுப்பதற்கு நகந்தோய் இல்லை. லண்டனில் இருக்கும் தன் மகளைக் காணப் புறப்பட்ட குஜராத்தின் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி தற்போது இல்லை.
பிரிட்டிஷ் பயணியான ஜேமி ரே மீக் என்பவரும் ஒருவர். விமானத்தில் ஏறுவதற்கு முன், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில்.”குட் பை இந்தியா” என்று அவர் கூறியிருக்கிறார், ஆனால் அது அவருடைய கடைசி குட் பையாக மாறி விட்டது. அகமாதாபாத்தில் இருந்த புறப்பட்ட தன் மகனிடம் லண்டனிற்கு எத்தனை மணிக்குச் சென்று சேர்ந்தாலும் எனக்கு போன் பண்ணனும் என்று சொல்லி அனுப்பிய தாய் நந்தினிக்கு இனி எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மகனிடம் இருந்து போன் வராது என்பதை எப்படிச் சொல்வது?
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு டாடா குழுமம் ஒரு கோடி ரூபாயை நிவாரணமாக அளித்திருக்கிறது. காயமடைந்தவர்களுக்கான சிகிச்சையையும், உடைந்த மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியை கட்டித்தருவதாகவும் தெரிவித்திருக்கிறது. எத்தனை கோடிகள் கொடுத்தாலும் ஈடு செய்ய முடியாததல்லவா உயிரின் மதிப்பு.
எந்தவொரு விமானியும், எந்தவொரு கப்பல் கேப்டனும் தன் பயண அனுபவத்தில் சொல்ல விரும்பாத வார்த்தை மே டே.. ஏதாவது பண்ண முடியுமானு பாருங்களேன். நிலைமை என் கைமீறிப் போயிடுச்சு என்பதை கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிப்பதற்காக சொல்லப்படும் வார்த்தைகள் அது. விமானம் ஓடுதளத்தில் இருந்து கிளம்பிய சற்று நேரத்தில் எல்லாம் விமானிகள் தொடர்ச்சியாக அந்த வார்த்தையை உச்சரித்திருக்கிறார்கள்.
எனில் தவறு நடந்தது எங்கே விமானத்தில் பயணித்த 242 உயிர்களைத் தாண்டி எதுவுமே அறியாமல் உணவருந்திக் கொண்டிருந்த மருத்துவ மாணவர்களின் கனவையும் கலைத்த தவறு எது? கருப்பு பெட்டி என்று சொல்லக் கூடிய விமானத்தின் ரகசியப் பெட்டி எவ்வித சேதாரமும் இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கிறது. அந்தப் கருப்புப் பெட்டி பல ரகசியங்களைச் சுமந்து காத்திருக்கும். காரணங்களைப் பொறுத்தே ரகசியம் வருமா வராதா என்பது தெரியும்.
