‘மாநாடு’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது என்ற அறிவிப்பு வெளியான நாள் முதல் சிலம்பரசன் ரசிகர்கள் உற்சாகமாக இருந்தனர். ஆனால், சில பல காரணங்களால் படத்தை 25-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். இந்த முறை தவறக்கூடாது என்று எல்லா வேலைகளையும் பார்த்து பார்த்து கவனித்து வந்த படக்குழு, கோலாகலமாக இசை வெளியீட்டு விழாவை நடத்தியது. சிம்புவும் சென்னை, ஹைதராபாத் என பட ப்ரொமோஷனில் கலந்துகொண்டார். ஆன்லைன் டிக்கெட் புக்கிங்குகள் சரசரவென முழுமையானத் தொடர்ந்து, காலை 5 மணி ஷோவுக்கு ரசிகர்கள் தயாராகினர். இந்த நிலையில் நேற்று மாலை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் இருந்து ‘நாளை படம் வெளியாகவில்லை’ என்று வந்த ட்வீட் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் சிம்புவின் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
காரணம், படத்திற்கு பைனான்ஸ் செய்த உத்தம் சந்த் என்பவர்தான். இவர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு பைனான்ஸ் செய்திருக்கிறார். அந்தப் பணத்தை படம் வெளியீட்டுக்கு முன் திரும்பத் தருவதாக, சுரேஷ் காமாட்சி சொல்லியிருந்திருக்கிறார். ஆனால், அவரால் அந்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், படத்தை வெளியாக சிக்கல் ஏற்பட்டது.
படத்தின் தமிழ்நாடு தியேட்டரிக்கல் உரிமம் 11 கோடிக்கு வாங்கப்பட்டிருப்பதால் குறித்த தேதியில் படம் வெளியாகாவிட்டால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று கவலைப்பட்டனர். பல முன்னணி தயாரிப்பாளர்கள் முன்னணியில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
சோனி நிறுவனம் 10.5 கோடிக்கு படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை வாங்கிக்கொள்வதாகக் கூறியிருந்தது. அதன் பேரில் பைனான்சியர் அன்புச்செழியன் 10 கோடி ரூபாய் கடனாக கொடுத்து உதவியிருக்கிறார். சிம்பு படம் பிரச்னை இல்லாமல் வெளியாக வேண்டும் என்பதற்காக, அவர் தற்போது நடித்து வரும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் 3 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார். சிம்புவின் அம்மா உஷா ராஜேந்தர் ‘என் மகன் படம் வெளியாகாமல் இருப்பது கெளரவ பிரச்னை’ என்று 3 கோடி ரூபாய் தருவதாக ஒப்புக்கொண்டார். படத்தின் சாட்டிலைட் உரிமையை கலைஞர் டிவிக்கு வாங்கி அதன் மூலம் 6 கோடி ரூபாய் பணம் கொடுப்பதகா சொல்லியிருந்தனர், உதயநிதி ஸ்டாலின் தரப்பு. இதனால், கடன் அடைந்து படம் வெளியாவது முதலில் உறுதி செய்யப்பட்டது.
அதன் பிறகு நடந்த பேச்சுவார்த்தையில் படத்தை வரும் பொங்கலுக்கு கலைஞர் டிவியில் ஒளிப்பரப்ப இருக்கிறோம் என்று கூறியிருக்கின்றனர். ஆனால், ‘மாநாடு’ படக்குழுவோ, படம் வெளியாகி மூன்று மாதம் கழித்துதான் டிவியில் ஒளிப்பர வேண்டும் என்று சோனி நிறுவனத்திடம் ஒப்பந்தமிட்டிருக்கிறது. அதனால், படத்தை கலைஞர் டிவி தரப்பு வாங்கவில்லை. இப்போது அவர்கள் கொடுப்பதாக இருந்த 6 கோடி துண்டு விழுந்தது. அதனால்தான், காலை 5 மணி ஷோ ரத்தானது. விடிய விடிய நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையில் விடுப்பட்ட 6 கோடியை டி.ராஜேந்தர் தருவதாக வாக்குறுதி அளித்த பின்பே, படம் 8 மணிக்கு வெளியானது. இதைத்தொடர்ந்து ஒருவழியாக விஜய்டிவி “மாநாடு ” படத்தின் சாட்டிலைட் உரிமையை 8 கோடிக்கு வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் மாநாடு படத்தின் சாட்டிலைட் உரிமை தொடர்பாக நடிகர் சிம்புவின் தந்தை டி ராஜேந்தர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பைனான்சியர் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது படத்தை வெளியிட பெருமுயற்சி எடுத்த எங்களை கலந்தாலோசிக்காமல் சேட்டிலைட் உரிமை விற்கப்பட்டுள்ளதாக டி ராஜேந்தர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.