கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றவே ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், மக்களை துன்புறுத்துவதற்காக விதிக்கப்படவில்லை என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நெல்லை மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, இரு மாவட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது, அவர் பேசியதாவது,
தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளை அதிகமாக நிறுவ வேண்டுமென்பது அரசின் முதன்மையான கொள்கை. உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, புதிய தொழில்கள் தொடங்குவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறது. இந்தச் சோதனையான நேரத்தில் கூட, இந்தியாவிலேயே, அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலம் தமிழ்நாடுதான். அதேபோல், அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தந்ததும் தமிழ்நாடுதான்.
தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். தென்மாவட்டங்களுக்கு மேலும் அதிகமான தொழிற்சாலைகளை கொண்டு வரவேண்டுமென்று கோரிக்கை வைத்தீர்கள். அரசின் விருப்பமும் அதுதான். தென்மாவட்டங்களில் புதிதாக தொழில் தொடங்க விரும்பினால், தொழில் துறை செயலாளர் அவர்கள் குறிப்பிட்டதைப்போல, நிலத்தின் மதிப்பில் பாதியளவு மானியமாகக் கொடுக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், தொழிற்சாலை அமைப்பதற்கும் மானியம் வழங்குகிறோம். தொழில் தொடங்குவதற்கான அனுமதியை எவ்விதத் தடையுமில்லாமல், குறிப்பிட்ட காலத்திற்குள், மிகவிரைவாக அரசு வழங்குகிறது. இதுபோல பல்வேறு வகைகளில் அரசு உதவி செய்கிறது. எனவே, எவ்வித சிரமமும் இல்லாமல் தொழில் தொடங்கலாம்.
போக்குவரத்து வசதியைப் பொறுத்தவரை, ஏற்கனவே மண்டல அளவில் பொது போக்குவரத்து துவங்க வேண்டுமென்று தான் அரசு முடிவெடுத்து அறிவித்தோம். ஆனால், இப்பொழுது கொரோனா நோய்த் தொற்றை தடுக்க வேண்டிய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். இது உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சனை. நாம் கடுமையாக நடவடிக்கைகளை எடுத்த காரணத்தினால் தான், இந்தியாவிலேயே கொரோனா தடுப்புப் பணிகளில் நாம் முதலிடம் வகித்துக் கொண்டிருக்கிறோம், இறப்பு சதவீதம் குறைந்திருக்கிறது, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
அண்டை மாநிலங்களில் இப்பொழுது இறப்பு சதவீதம் அதிகரித்து வருகிறது. அந்த மாநிலங்களில் 25,000 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டால், 10,000 நபர்களுக்கு கொரோனா நோய் அறிகுறி இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் அப்படியில்லை. தமிழ்நாடு முழுவதும் ஒரு நாளைக்கு சுமார் 62,000 எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் பரிசோதனை செய்வதில், 5,200 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்படுகிறது. இதைப் படிப்படியாக குறைத்து, இயல்பு நிலை திரும்புவதற்குத் தான் அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சிலருக்கு கொரோனா நோய்த் தொற்று வந்தால் கூட எந்தவித அறிகுறியும் தெரியாது. உயிரை காப்பாற்றுவது அரசினுடைய முதல் கடமை. அதனால் தான் நாங்கள் எச்சரிக்கையாக, படிப்படியாக தளர்வுகளைக் கொண்டுவந்து, இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம். அதற்குத்தான் இந்தக் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறோம். இது மக்களைக் காப்பாற்றுவதற்கு அரசு எடுக்கின்ற நடவடிக்கை. மக்களை துன்பப்படுத்துவதற்கு அல்ல.
தொழிற்சாலைகளில் பணிபுரிகிற தொழிலாளர்கள், அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளை பின்பற்றி பணியாற்றினால்தான் இந்த நோய்த் தொற்றிலிருந்து காப்பாற்றப்படுவார்கள். அதனால், அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளை அனைத்து தொழில் நிறுவனங்களும் பின்பற்றி, சிறப்பான முறையில் தொழிற்சாலைகள் இயங்க வேண்டும் என அவர் பேசினார்.