தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விரிவான அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த செப்.1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து கடந்த 14ம் தேதி ஆலோசனை நடத்தினார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் காணொளி காட்சி மூலம் 14ம் தேதி ஆலோசனை நடத்தப்பட்டது. சில மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை திறக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். மற்ற சிலர் 1 முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளை திறக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் அளித்த கருத்துக்களையும் தொகுத்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இன்று விரிவான அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். அதில், 6 முதல் 8 வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை திறக்கலாம் என அதில் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அக்டோபர் முதல் வாரத்தில் பள்ளிகளை திறக்கலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த அறிக்கையின் அடிப்படையில், வரும் 30ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான நடைபெறவுள்ள ஊரடங்கு ஆலோசனையில் பள்ளிகளை திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.
இந்த அறிக்கை பரீசீலிக்கப்பட்டு சுகாதாரத்துறையினரின் கருத்துக்களை பெற்று முதலமைச்சர் அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.