கோவை இருகூர் மேம்பாலத்தில் நெகிழ்ச்சி சம்பவம்; பெரும் விபத்தைத் தவிர்த்த 69 வயது சண்முகசுந்தரம்
திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையிலும் பள்ளி வேனை பாதுகாப்பாக நிறுத்தி, அதில் இருந்த குழந்தைகள் மற்றும் ஊழியர்களின் உயிரைக் காப்பாற்றிய 69 வயது ஓட்டுநர் சண்முகசுந்தரம் உயிரிழந்த சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை இருகூர் மகாகவி நகரைச் சேர்ந்தவர் எஸ்.சண்முகசுந்தரம் (69). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளிக்குச் சொந்தமான வேனில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.
தினமும் காலையில் குழந்தைகள் மற்றும் பள்ளி ஊழியர்களை அழைத்துச் செல்வதும், மாலையில் அவர்களை வீடுகளில் இறக்கிவிடுவதும் அவரது வழக்கமான பணியாக இருந்தது.
வேனில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள்
வியாழக்கிழமை மாலை வழக்கம்போல் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் சில பள்ளி ஊழியர்களை வேனில் அழைத்துக்கொண்டு சண்முகசுந்தரம் சென்றுள்ளார்.
ஒண்டிப்புதூர் பகுதியில் குழந்தைகளை இறக்கிவிட்டு இருகூர் நோக்கி அவர் சென்றுள்ளார்.
அப்போது வேனில் இரண்டு பள்ளி ஊழியர்களும் இரண்டு குழந்தைகளும் இருந்துள்ளனர்.
இருகூர் ரயில்வே மேம்பாலத்தில் வேன் சென்றுகொண்டிருந்தபோது சண்முகசுந்தரத்திற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதனால் ஒரு கட்டத்தில் வேன் கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதியுள்ளது.
பெரும் விபத்தைத் தவிர்த்த ஓட்டுநர்
உடல்நிலை மோசமான நிலையிலும் சண்முகசுந்தரம் வேன் கவிழாமல் கட்டுப்படுத்தியதுடன், அதை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தியுள்ளார்.
அதன்பிறகு அவர் ஸ்டியரிங் மீது மயங்கி விழுந்துள்ளார்.
தகவலறிந்து 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு விரைந்தது. அவரைப் பரிசோதித்த மருத்துவப் பணியாளர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு கிழக்கு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சண்முகசுந்தரம் கடைசி நேரத்திலும் வேனை கட்டுப்படுத்தாமல் இருந்திருந்தால் பெரிய விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பிருந்ததாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்த அவரது கடைசி நேர முயற்சியை காவல்துறையினரும் பள்ளி நிர்வாகத்தினரும் பாராட்டியுள்ளனர்.
