மக்கள் தங்களது பிரச்சனைகளை முன்வைப்பதற்காக இலங்கை அதிபர் புதிய முயற்சி.
பொதுமக்கள் தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் சிக்கல்கள் இருப்பதாக முறையிட்டதைத் தொடர்ந்து, பொதுமக்கள் தினத்தை நடைமுறைப்படுத்த அதிபர் கோட்டபய ராஜபக்சே அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, இனி ஒவ்வொரு புதன் கிழமையும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பொது மக்கள் தங்களது பிரச்சனைகளை முன்வைப்பதற்காக இந்த ஆலோசனை கொண்டு வரப்பட்டுள்ளது.
புதன் கிழமைகளில் அரசாங்க அதிகாரிகள் வேறு எந்த பணிகளிலும் ஈடுபடாத போது மக்களின் குறைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துவதற்காக இந்த ஏற்பாடு. அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், அதிகாரிகள் பொது மக்களின் சந்திப்பிற்கு முக்கியத்துவம் வழங்கவேண்டும் என்றும் அதிபர் கோட்டபய ராஜபக்சே அறிவுறுத்தியுள்ளார்.
முன்னதாக, ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பல்வேறு நியமனங்களுக்கு எதிராக பல்வேறு அழுத்தங்கள் முன்வைக்கப்படுவது தொடர்பாக கருத்து தெரிவித்த கோட்டபய ராஜபக்சே, ஆழமாக சிந்தித்து நியமிக்கப்பட்ட நியமனங்களை மாற்றி, பல்வேறு அழுத்தங்களின் காரணத்தினால் வேறு ஒருவரை அதற்காக நியமிப்பதற்கு எவ்வித எதிர்பார்ப்பும் தம்மிடம் இல்லை என்றும், எனவே, சில நியமனங்களுக்கு எதிராக அதனை மாற்றுமாறு தமக்கு அல்லது அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் கொடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.