‘அம்பேத்கரை’ நினைவுக்கூர்ந்து நெகிழ்ச்சி உரை… பிரியா விடையளித்த ராம்நாத் கோவிந்த்

தனது பதவிக்காலம் இன்றுடன் முடிவடைந்த நிலையில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.

நாட்டின் 15வது குடியரசுத்தலைவராக திரவுபதி முர்மு நாளை பதவியேற்கவுள்ளார். ராம்நாத் கோவிந்தின் பதவிகாலம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து வெளியேறும் முன் நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.

அவர் ஆற்றிய உரையில் கூறியதாவது: சாதாரண குடும்பத்தில் பிறந்த தனக்கு நாட்டிற்கு சேவை புரிய வாய்ப்பு கிடைத்தது ஜனநாயகத்தின் சிறப்பாகும். நமது நாட்டின் ஜனநாயக அமைப்பிற்கு தலை வணங்குகிறேன். அரசுத் துறையில் பணிபுரியும் அதிகாரிகள், பல மதங்களின் ஆச்சாரியர்கள், குருமார்கள் அனைவரும் எனக்கு நல்ல ஒத்துழைப்பு நல்கினர். இளைஞர்கள் தங்களது கிராமங்கள் மற்றும் தங்கள் படித்த பள்ளிகளுடன் எப்பொழுதும் தொடர்பில் இருங்கள். அரசியல் நிர்ணய சட்டம் அமலுக்கு வருவதற்கு ஒரு நாள் முன்பு அந்த அவையில் பேசிய அம்பேத்கர், நமது ஜனநாயகத்தை சாதாரண மக்களின் ஜனநாயாகமாக மாற்ற வேண்டும் என்று கூறினார்.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை நிலைநாட்டப்பட வேண்டும். ஏழை, எளியோருக்கு பலன்கள் கிடைப்பதற்கு ஆட்சியாளர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும். இந்த திசையில் நாம் முன்னேற்றமடைய முக்கியமானது கல்வி. இளைஞர்கள் கல்வியில் முன்னேற வேண்டுமானால் சுகாதாரம் அவசியம். 21ம் நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக மாற்ற நம்நாடு பாடுபட்டு வருகிறது. எனது 5 ஆண்டுகால பதவியில் எனது பணியை சிறப்பாக ஆற்றியுள்ளேன்.நாம் நீர், காற்று மாசுபடாமல் காக்க வேண்டும். மரங்கள், ஆறுகள், மலைகள் போன்றவற்றை பேணிக்காக்க வேண்டும். எனது பதவிகாலத்தை முடிக்கும் இந்த வேலையில் நான் நாட்டு மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு பேசினார்.

-பா.ஈ. பரசுராமன்.

Exit mobile version