11 பதிவேடுகளை நீக்க உத்தரவு

ஆசிரியர்களின் பணிச்சுமையை குறைக்கும் விதமாக  தேவையற்ற 11 பதிவேடுகள் நீக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர்கள் தங்களது பணி நேரத்தை மாணவர்களின் கற்றல்,கற்பித்தல் பணிக்காக முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளும் வகையில் பள்ளி பதிவேடுகள் கணினி மயமாக்கப்படும் என்று மானியக்கோரிக்கையின் போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டது.

அதன்படி, தேவையற்ற 11பதிவேடுகளை நீக்க கல்வித்துறை அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த வகையில், கருவூல பதிவேடு, சம்பள பிடித்தம் பதிவேடு, கூடுதல் பண பதிவேடு, நிரந்தர சம்பள பிடித்தம் பதிவேடு, நிலுவையில் உள்ள சிறப்பு கட்டண பதிவேடு, அபராத பதிவேடு, பில் பதிவேடு, தற்காலிக பதிவேடு உள்ளிட்ட 11பதிவேடுகளை நீக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், 81பதிவேடுகளை கல்வி தகவல் மேலாண்மை முறைமை வாயிலாக கணினியில் மட்டும் பராமரித்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எண்ணும்,எழுத்தும் திட்டத்தை செயல்படுத்தும் 1,2 மற்றும் 3ம் வகுப்பு ஆசிரியர்கள் பாடக்குறிப்பேடு மட்டும் பராமரித்தால் போதுமானது. இதேபோல் 4-12ம் வகுப்பு பாட ஆசிரியர்களும் பாடக்குறிப்பேடு மட்டும் பராமரித்தல் போதுமானது. பாடத்திட்டம், பணி செய் பதிவேடு ஆகிய பதிவேடுகளை பராமரிக்க தேவையில்லை. இவ்வாறு அந்த சுற்றறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version