போலீஸ் அதிகாரியின் 17 வயது மகளை சீரழித்த சாமியார்

நீ எனக்காக பூமிக்கு அனுப்பப்பட்டவள் என்று கூறி போலீசாரின் மகளை வன்புணர்வு செய்தா சாமியாரை போலீசார் கைது செய்தனர்.

மும்பையை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவருக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு வெர்சோவா பகுதியை சேர்ந்த சாப்ட்வேர் நிறுவன மேலாளர் சுரேஷ்குமார் அவஸ்தி (58) என்பவர் பழக்கமாகியுள்ளார். அவர் விடுமுறை நாட்களில் பூஜை செய்து வந்ததாக கூறப்படுகிறது. சுரேஷ்குமார் அவஸ்தியை போலீஸ் அதிகாரி முழுமையாக நம்பியுள்ளார். ஆனால், போலீஸ் அதிகாரியின் மனைவிக்கு சாமியாரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சாமியாரை சந்திக்க போக வேண்டாம் என  போலீஸ் அதிகாரியை எச்சரித்துள்ளார். ஆனால், மனைவியின் பேச்சை உதாசீனப்படுத்திய போலீஸ் அதிகாரி, தனது மகன் மற்றும் 17 வயது மகளை அவரிடம் பூஜைக்காக அனுப்பி வைத்துள்ளார்.

இருவரும் சாமியாரின் இடத்திற்கு சென்ற நிலையில், சிறுவனை பூஜை சாமான் வாங்கி வருமாறு சாமியார் கடைக்கு அனுப்பியுள்ளார். இதற்கிடையே, சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். சிறுமிக்கு மயக்கம் தெளிந்த நிலையில், தனக்கு கடவுள் சக்தி இருப்பதாகவும், நீ எனக்காக பிறந்தவள் என்றும் சினிமா வசனம் எல்லாம் பேசியிருக்கிறார். மேலும், நடந்த விசயத்தை வெளியே சொன்னால் குடும்பத்தை அழித்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த சாமியார் 3 வருடங்களாக சிறுமியை சீரழித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், போலீஸ் அதிகாரியின் வீட்டிற்கு சென்ற சாமியார், பூஜை செய்ய வேண்டும் சிறுமியை அனுப்பி வையுங்கள் என்று கேட்டிருக்கிறார். இதற்கு போலீஸ் அதிகாரியின் மனைவி மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து, சிறுமி  கடந்த 3 வருடங்களாக தான் அனுபவித்து வரும் பாலியல் கொடுமைகளை தன் தாயாரிடம் சொல்லி அழுதுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் போலீசில் புகாரளித்தார். வழக்கை பதிவு செய்த போலீசார் சுரேஷ் அவஸ்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீஸ் அதிகாரியே கண் மூடித்தனமாக சாமியாரை நம்பி தனது மகளின் வாழ்க்கையை சீரழித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version