இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: கலக்கத்தில் வாகன ஓட்டிகள்!!

சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்திருப்பது வாகன ஓட்டிகள் மற்றும் சாமானிய மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைப்பிடித்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தினசரி மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை சந்தித்துள்ளதால், இந்தியாவில் வரலாறு காணாத அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மத்திய அரசால் விதிக்கப்படும் வரியும் இதற்கு காரணம். சென்னையில் பெட்ரோல் விலை நேற்று லிட்டர் ஒன்றுக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ.106.04க்கும் மற்றும் டீசல் விலை 33 காசுகள் அதிகரித்து ரூ.102.25க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நேற்று முதன்முறையாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தை சந்தித்தது. இந்த நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை இன்று லிட்டர் ஒன்றுக்கு 31 காசுகள் அதிகரித்து ரூ.106.35க்கும் மற்றும் டீசல் விலை 34 காசுகள் அதிகரித்து ரூ.102.59க்கும் விற்பனையானது.

இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகள் மற்றும் சாமானிய மக்களிடையே கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் டீசல் விலையை குறைக்கக் கோரி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Exit mobile version