நாக்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்து ரயிலில் பயணம் செய்த பிரதமர் மோடி

மராட்டியம் மற்றும் கோவாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நாக்பூர்-பிலாஸ்பூர் வழித்தடத்தில் ஆறாவது வந்தே பாரத் ரயிலை இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து நாக்பூர் மெட்ரோவின் முதல் கட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, இரண்டாம் கட்டத்தின் அடிக்கல் நாட்டினார்.

பின்னர் மெட்ரோ ரயிலில் டிக்கெட்டை வாங்கி, பயணம் செய்த பிரதமர், மாணவர்கள் மற்றும் உள்ளூர் மக்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து பிரதமர் மோடி இன்று நாக்பூரில் 75,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார். விதர்பா நகரில் நடைபெறும் பொது விழாவில், ரூ.1,500 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

இதன் பிறகு, பிரதமர் மோடி கோவா செல்கிறார். அங்கு பல்வேறு நலத்திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார். மோபா விமான நிலையத்தையும் திறந்து வைக்கிறார். பிரதமரின் வருகையையொட்டி, பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 4,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version