டாஸ்மாக் முறைகேடு வழக்கு – இடைக்காலத் தடை

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு எதிராக அமலாக்கத் துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் விக்ரம் ரவீந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் , வி.லட்சுமி நாராயணன் அமர்வு, டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை இன்று தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

(c)PragMatrix

அதன்படி, அமலாக்கத்துறை தரப்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும், தங்கள் அனுமதியின்றி வீட்டுக்குள் நுழைய வேண்டாம் என ஒட்டப்பட்ட நோட்டீசை திரும்பப் பெறுவதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட மின்னணு சாதனங்களை திரும்ப ஒப்படைக்க தயாராக இருப்பதாகவும் அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் தாக்கல் செய்திருந்த மனுக்கள் மீதான இடைக்கால உத்தரவை நீதிபதிகள், தள்ளிவைத்திருந்தனர்.

இடைக்கால உத்தரவு

நீதிபதிகள் எம்.எச்ஸ்.ரமேஷ் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அமர்வு, இன்று இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.

நீதிபதிகள் இன்று பிறப்பித்த இடைக்கால உத்தரவில், டாஸ்மாக் முறைகேட்டில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு தொடர்பு உள்ளது என்பதற்கு அமலாக்கத் துறையிடம் எந்த ஆதாரங்களும் இல்லை. எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில், இருவரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தவும், பறிமுதல் செய்யவும் அமலாக்கத் துறைக்கு எந்த அதிகாரவரம்பும் இல்லை எனக் கூறி, அமலாக்கத் துறையின் மேல் நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிபதிகள், பிரதான வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர். அப்போது, இந்த இடைக்கால உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய ஏதுவாக உத்தரவை நிறுத்தி வைக்கும்படி, அமலாக்கத் துறை முன் வைத்த கோரிக்கையை நீதிபதிகள், ஏற்க மறுத்து விட்டனர்.

Exit mobile version