தன்னை வளர்த்தவர் உடலை கண்டுபிடித்த பாசக்கார நாய் “கூவி” – நாயை தத்தெடுக்க முடிவு

கேரளாவின் இடுக்கி மாவட்டம் பெட்டிமுடியில் ஏற்பட்ட நிலச்சரிவில், வளர்த்தவர் உடலைத் தேடிக் கண்டுபிடித்த நாயை, போலீஸ் மோப்ப நாய் பிரிவின் பயிற்சியாளர் அஜித் மாதவன் தத்தெடுக்க முடிவு செய்துள்ளார்.

கேரளாவின் இடுக்கி மாவட்டம் பெட்டிமுடியில், கடந்த 7-ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் உடல்களை மீட்கும் பணி, தொடர்ந்து பல நாட்களாக நடந்து வருகிறது. உடல்களை தேடும் பணியில் போலீஸ் மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்பட்டன. இதற்காக கேரள போலீஸ் மோப்ப நாய் பிரிவின் பயிற்சியாளர், அஜித் மாதவன் அங்கு வந்தார்.

அப்போது, நிலச்சரிவு ஏற்பட்ட ஒரு பகுதியில் தன்னை வளர்த்தவர்களைக் காணாமல், “கூவி” என்ற நாய் அவர்களை தேடி அலைந்ததை அஜித் மாதவன் கவனித்தார். குடும்பத்தினரை காணாததால், கூவி ஒரு வாரத்திற்கும் மேலாக சாப்பிடாமல் இருந்துள்ளது. இதனால், பாசக்கார கூவியை தன் நாய்களுடன் தங்க வைக்க முடிவு செய்தார், அஜித் மாதவன். அவருடைய நீண்ட முயற்சிக்குப் பலனாக, கூவி சாப்பிட்டது.

இதற்கிடையே, தன்னை வளர்த்த குடும்பத்தை சேர்ந்த தனுஷ்காவின் உடலை, அங்குள்ள ஆற்றில் 4 கி.மீ.,க்கு தொலைவில் கூவி கண்டுபிடித்தது. இது அங்கிருந்த அனைவரையும் நெகிழச் செய்தது. இதனால் கூவியை தத்தெடுத்து, மோப்ப நாய்களின் பிரிவில் சேர்க்க அஜித் மாதவன் திட்டமிட்டுள்ளார். இதற்கான அனுமதியை இடுக்கி மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கோரியுள்ளார்.

Exit mobile version