நீட் தேர்வு எழுதியுள்ள மாணவர்கள் தற்கொலை முடிவை மேற்கொள்ள கூடாது என நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் நீட் தேர்வு அச்சம் காரணமாக சில மாணவர்கள் தற்கொலை உள்ளிட்ட விபரீதமான முடிவுகளை கையிலெடுத்து வருகின்றனர். இதனையடுத்து ‘மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளக்கூடாது’ என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில் நடிகர் சூர்யாவும், அதே கோரிக்கையை வலியுறுத்தி வீடியோ ஒன்றை பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
அதில் பேசியுள்ள அவர், ”அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே. மாணவர்கள் அச்சமில்லாமல் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என வேண்டி கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கு கடந்த மாதம் இருந்த வேதனை, கவலை இந்த மாதம் இருக்கிறதா? யோசித்து பாருங்கள். நிச்சயம் குறைந்திருக்கும். அல்லது தீர்ந்திருக்கும்.
ஒரு பரீட்சை உங்க உயிரை விட பெரிது இல்லை. உங்க மனதுக்கு கடினமாக இருந்தால், உங்களுக்கு பிடித்தவர்கள், அப்பா, அம்மா, நண்பர்கள், பெரியவர்கள், ஆசிரியர்கள் என யாரிடமாவது மனதுவிட்டு பேசிவிடுங்கள். பயம், கவலை, வேதனை, விரக்தி எல்லாமே சிறிது நேரத்தில் மறைந்துவிடக்கூடியவை.
தற்கொலை, வாழ்க்கையை முடித்துக்கொள்வது என்பதெல்லாம் உங்களை விரும்புபவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் வாழ்நாள் தண்டனை. நான் எல்லா பரீட்சையிலும் தோல்வியடைந்து, குறைவான மதிப்பெண்களை பெற்றிருக்கிறேன். மதிப்பெண், தேர்வு மட்டும் வாழ்க்கையில்லை. சாதிக்க அத்தனை விஷயங்கள் வாழ்வில் இருக்கிறது. உங்களை புரிந்துகொள்ள நேசிக்க நிறைய பேர் இருக்கிறார்கள். நம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் பெரிய அளவில் வெற்றி பெற முடியும்” என மாணவர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளார்.