டெல்லி மருத்துவமனையில் நுரையீரல், சிறுநீரகத்தில் கருப்பு பூஞ்சை தொற்று பாதித்த உலகின் முதல் நபர் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலமாக மீண்டுள்ளார்.
கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்த 34 வயதுடைய நபருக்கு கருப்பு பூஞ்சை எனப்படும் முக்கோர்மிகோசிஸ் நோய்த்தொற்று ஏற்பட்டது. இவர் காஜியாபாத்தைச் சேர்ந்தவர். இவருக்கு சர் கங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கருப்பு பூஞ்சை தொற்று அவரது நாசி குழிக்குள் பரவியது மட்டுமல்லாமல், அவரது இடது நுரையீரல் மற்றும் வலது சிறுநீரகத்திற்கும் பரவி பாதிப்பை ஏற்படுத்தியது.
கொரோனா தொற்றுக்குப் பிறகு நுரையீரல், சிறுநீரகத்தில் கருப்பு பூஞ்சை ஏற்பட்ட உலகின் முதல் நபர் இவர் தான். பாதிக்கப்பட்ட அந்த நபருக்கு நுரையீரல் மற்றும் சிறுநீரகத்தின் இரு பகுதிகளும் கடுமையாக சேதமடைந்தும் மற்ற உறுப்புகளுக்கும் பரவும் வகையிலும் இருந்துள்ளது. அதனால் மருத்துவர்கள் சளி பாதித்த பகுதிகளை அவசர அவசரமாக அறுவை சிகிச்சை மூலம் அகற்ற திட்டமிட்டனர்.
கருப்பு பூஞ்சை என்பது வேகமாகப் பரவும் நோயாகவும், மற்ற உறுப்புகளை மேலும் சேதப்படுத்தக்கூடியதாகவும் இருப்பதால் அவரது இடது நுரையீரலின் ஒரு பகுதியும் முழு வலது சிறுநீரகமும் உடனடியாக அகற்றப்பட்டுள்ளது. இந்த சிக்கலான அறுவை சிகிச்சை ஆறு மணி நேரம் நடைபெற்றது.
பின்னர், இவர் சில வாரங்களுக்கு வாய் வழியாக பூஞ்சை தொற்றுக்கு மருந்தை உட்கொண்டுள்ளார். 45 நாட்களுக்கு பிறகு பூஞ்சை எதிர்ப்பு சிகிச்சையிலிருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மேலும், தற்போது இவர் உடல்நிலை முழுவதும் குணமடைந்து சீராக உள்ளது என்று மருத்துவக் குழுவினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.