உலகிலேயே மிகவும் நீளமான அடல் சுரங்கப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்பாணித்தார். முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் 2000ம் ஆண்டு ஜூன் மாதம் 3ம் தேதி ரோதக் சுரங்கப் பாதையை அமைக்க முடிவெடுத்தார். இதற்கான அடிக்கல் அந்த ஆண்டே மே மாதம் 26ம் தேதி போடப்பட்டது. வாஜ்பாய் அவர்களின் கனவு திட்டமான அதை 20 ஆண்டுகளுக்குப் பிரதமர் மோடி நிறைவேற்றியுள்ளார்.
2019ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ரோதங் சுரங்கப்பாதை திட்டத்திற்கு அடல் சுரங்கப்பாதை என பெயர் மாற்றம் செய்தது. 10 ஆண்டு கால கடின உழைப்பின் பலனாக இன்று உலகமே வியந்து பார்க்கும் வண்ணம் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ளது.
இமாச்சலப்பிரதேசத்தின் மணாலி இருந்து லே நகருக்கு செல்லும் நெடுஞ்சாலையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 10 ஆயிரம் அடி உயரத்திற்கு அடல் சுரங்க பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதையில் ஒரு நாளைக்கு 3,000 கார்கள், 1,500 கனரக வாகனங்கள் 80 கி.மீ வேகத்தில் செல்ல முடியும். குதிரை கால் லாடத்தை போல யு வடிவத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
அவசர கால தகவல் தொடர்புக்கு 150 மீட்டர் இடைவெளியில் தொலைபேசி இணைப்புகள், 60 மீட்டருக்கு ஒரு தீயணைப்பு கருவி, 500 மீட்டரில் அவசர கால வெளியேறும் வழி, 250 மீட்டருக்கு ஒரு சிசிடிவி கேமரா, ஒவ்வொரு ஒரு கிலோ மீட்டரிலும் காற்று தர கண்காணிப்பு கருவி என பல வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.