நீட் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவை மாணவர்கள் கைவிட வேண்டும் என தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் அறிக்கை விடுத்துள்ளார்.

மாணவர்கள் தற்கொலை செய்யும் முடிவைக் கைவிட வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”கடந்த சில தினங்களுக்கு முன்பு நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக, அரியலூரைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் நாளை நீட் தேர்வு நடைபெறும் நிலையில், தேர்வில் வெற்றி பெறுவோமா என்ற பயத்தில், மதுரை மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா, இன்று அதிகாலை தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி கேட்டு மன வேதனை அடைந்தேன்.
தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தை முதலில் மாணவர்கள் கைவிட வேண்டும். தற்கொலை என்பது தீர்வல்ல. வருங்காலம் என்பது இளைஞர்களின் கையில் இருக்கிறது. வாழ்க்கையை துணிவோடு எதிர்கொண்டு முன்னோக்கி செல்லும்போது தான் பல வெற்றி தோல்விகளை சந்திக்க முடியும். ஒவ்வொரு தடைக்கல்லையும் படிக்கல்லாக மாற்றும் திறன் படைத்தவர்கள் நமது மாணவ சமுதாயத்தினர்.” என்று தெரிவித்துள்ளார்