தெரிந்தவர்கள் மூலமாக வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் பெண்கள்… கடந்த ஆண்டை விட அதிகரித்த கற்பழிப்பு சம்பவங்கள்!!

டெல்லியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 20% கற்பழிப்பு வன்கொடுமை அதிகரித்துள்ளது; 97% கற்பழிப்பு பெண்களுக்கு தெரிந்தவர்கள் மூலமே நடந்துள்ளது.

டெல்லி,
தலைநகர் டெல்லியில் பெண்களுக்கான வன்கொடுமை அதிகம் அரங்கேறுகிறது; பச்சிளம் குழந்தை முதல் 18வயதை கடந்த பெண்கள் என பாலியல் குற்றங்கள் டெல்லி காவல்துறையால் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

டெல்லி காவல்துறை வெளிட்டு தரவுகளின் படி கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி வரை மாநிலத்தில் 1,429 கற்பழிப்பு வன்கொடுமைகள் நடந்துள்ளது என்றால் 2021ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி வரை 1,725 கற்பழிப்பு வன்கொடுமைகள் நடந்துள்ளது. அதாவது கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு 20% பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது. இதேபோல பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் ( வன்கொடுமை ) கீழ் கடந்த ஆண்டு 1,791 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 2,157 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 20.43% பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நிகழ்ந்து உள்ளது தெரியவந்துள்ளது. 2019ம் ஆண்டுடன் 2020ம் ஆண்டை ஒப்பிடும்பட்சத்தில் மாநிலத்தில் கற்பழிப்பு வழக்குகள் 28% குறைவாக இருந்தது எனவும் அதுபோல் பாலியல் வன்கொடுமை வழக்குகளும் 32.91% குறைந்து இருந்தது.

இவை கொரோனா பொதுமுடக்கம் காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ள டெல்லி காவல்துறை மொத்த கற்பழிப்பு வழக்குகளில் 97% கற்பழிப்பு என்பதும் பெண்களுக்கு தெரிந்தவர்களாலே நிகழ்ந்துள்ளது; 2% மட்டுமே தெரியாத சிலரால் கற்பழிப்பு நடந்துள்ளது என்பதை காவல்துறை தெரிவிக்கிறது.

இதேபோல, டெல்லியில் கடத்தல் வழக்குகள் என்பது கடந்த ஆண்டு 2,344 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு 3,342 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலும், பெற்றோருடன் அல்லது பாதுகாவளர்களுடன் சண்டையிட்டு வீட்டை விட்டு ஓடி சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு மற்றும் வன்கொடுமை குற்றங்களை தவிர்க்க நகரின் வெளிச்சம் இல்லாத பகுதிகளில் முறையான விளக்குகள் அமைக்கவும் டெல்லி காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடந்த இடங்களின் வரைபடம் எடுக்கப்பட்டு அதன் மூலம் தேவையான நடவடிக்கை குறிப்பாக பாதுகாப்பு சார்ந்த நடவடிக்கை எடுக்க அண்மையில் நடைபெற்ற காவல்துறை உயர் அதிகாரிகள் கூட்டத்தில் காவல்த்துறை தலைவர் ராகேஷ் அஸ்தானா கூறியதாக மூத்த அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version