ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி தொடர்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவிக்கையில், அதிமுக பொறுத்தளவில் கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணி எப்படி இருந்ததோ அதைபோல் தான் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
பாமக தனித்து போட்டியிடுவதாக அறிவித்துவிட்ட நிலையில், பாமகவை தவிர, பிற கட்சிகளுடன் கூட்டணி உள்ளாட்சி தேர்தலில் தொடர்வதாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, அதிமுக கூட்டணியில் இருந்த பாமக வரும் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்திருந்தது. அதிமுக கூட்டணி தர்மத்தை காப்பாற்றவில்லை என்றும் கடந்த தேர்தலில் அதிமுகவினர் பல இடங்களில் ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியிருந்தார்.