முதல்வர் வேட்பாளரை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைமை விரைவில் அறிவிக்கும் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என அதிமுக அறிவித்துவிட்டாலும், சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை தேசிய தலைமை அறிவிக்கும் என கருத்து தெரித்தார் பாஜகவின் மாநிலத் தலைவர் எல்.முருகன். அதன் தொடர்ச்சியாக அவர் சொன்ன இன்னொரு கருத்தும் சர்ச்சையாகியுள்ளது.
அரியலூரில் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், தற்போதைய கூட்டணி வரும் சட்டமன்றத் தேர்தலில் தொடரும் எனவும், ஆனால் யார் முதல்வர் வேட்பாளர் என்றும் யார் தலைமையில் தேர்தலை சந்திப்பது என்பதை பாஜக மத்திய தலைமைதான் முடிவு செய்யும் என்றும் கூறினார். ஆனால் முருகனின் கருத்து ஏற்கத்தக்கதில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
read more: அறிவிப்பதற்கு முன்பு யோசிக்கமாட்டீர்களா? அமைச்சர்கள் ஸ்டாலின் கேள்வி
இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முருகன், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்து தலைமை விரைவில் அறிவிக்கும் என்று மீண்டும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே சென்னையில் மீண்டும் பேசிய அவர், “திமுக தமிழக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளது. அதுகுறித்து ஆளுநர் தான் முடிவு செய்ய முடியும். தமிழக அரசில் ஊழல் இல்லை என்பது தான் உண்மை” என்றார். பெரியாரின் நினைவு நாள் குறித்து கருத்து கேட்டதற்கு “அவருடைய நினைவு நாள்” என்று மட்டும் கூறிவிட்டு சென்றார். மு.அழகிரியுடன் பாஜகவிலிருந்து யாரும் பேசவில்லை எனவும், அவர் பாஜகவுக்கு வந்தால் வரவேற்போம் என்றும் எல்.முருகன் கூறினார்.