தளபதி விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த ஜல்லிக்கட்டு ஜலீல்!

தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் பதிவு செய்துவிட்டதற்கு மெரினா ஜல்லிக்கட்டு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளரான ஆர்.கே.ஜலீல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கட்சி ஆரம்பிக்க போகிறேன், தேர்தலை சந்திக்கப்போகிறோம் என்று நடிகர் விஜய் அறிவித்த நாளில் இருந்த நடிகர் விஜய்க்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு குவிந்து வருகிறது. கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகப்படுத்திய விஜய், தற்போது தனது கட்சி அதிகாரப்பூர்வ அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்கிற அடிப்படைக் கோட்பாட்டோடு நாம் அரசியலை அணுகுவதும் ஒருவிதக் கொள்கைக் கொண்டாட்டமே. எனினும் முழுமையான கொண்டாட்டத்திற்காகவும், அரசியல் கட்சிக்கான சட்டப்பூர்வமானப் பதிவுக்காகவுமே நாம் இதுவரை காத்திருந்தோம். இப்போது அதற்கான அனுமதியும் கிடைத்துவிட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தோம்.

அதைச் சட்டப்பூர்வமாகப் பரிசீலித்த நமது நாட்டின் தேர்தல் ஆணையம், தற்போது நம் தமிழக வெற்றிக் கழகத்தை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்து, தேர்தல் அரசியலில், பதிவுசெய்யப்பட்ட கட்சியாகப் பங்குபெற அனுமதி வழங்கி உள்ளது. இதை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

திசைகளை வெல்லப் போவதற்கான முன்னறிவிப்பாக, இப்போது முதற்கதவு நமக்காகத் திறந்திருக்கிறது.இச்சூழலில், நமது கழகத்தின் கொள்கைப் பிரகடன முதல் மாநில மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை காத்திருங்கள்.

தடைகளைத் தகர்த்தெறிந்து, கொடி உயர்த்தி, கொள்கை தீபம் ஏந்தி, தமிழக மக்களுக்கானத் தலையாய அரசியல் கட்சியாகத் தமிழ்நாட்டில் வலம் வருவோம்.வெ ற்றிக் கொடியேந்தி மக்களைச் சந்திப்போம்! வாகை சூடுவோம்!” எனக்குறிப்பிட்டுள்ளார்.

தளபதியின் விஜய்யின் இந்த அறிவிப்பிற்கு அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களையும் கடந்து பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், தமிழகர்களின் அடையாளமான ஜல்லிக்கட்டை காப்பதற்காக மெரினாவில் மாபெரும் போராட்டம் நடத்திய ஒருங்கிணைப்பாளர்களின் ஒருவரான ஆர்.கே.ஜலீல் வாழ்த்து கூறியுள்ளது கவனம் ஈர்த்துள்ளது. இதுகுறித்து தனது சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ள அவர், “தடைகளைத் தகர்த்து தளபதி விஜய் அவர்களின் தமிழக வெற்றிக் கழகம் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. உங்களுடைய கொள்கை தீபம் தமிழகம் முழுவதும் பிரகாசிக்க எனது மனமார்ந்த வாழ்த்துகள்!” எனக்குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வரலாற்றில் ஜல்லிக்கட்டு போராட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழகர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டிற்கு தடைவிதிக்கக்கூடாது எனக்கூறி லட்சக்கணக்கான இளம் தலைமுறையின் மெரினா கடற்கரையில் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இளம் தலைமுறையினர் பங்கேற்ற இந்த பிரம்மாண்ட போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்களில் ஒருவரான ஆர்.கே.ஜலீல் தளபதி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாழ்த்துக்கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version