ஊரக உள்ளாட்சிக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வேலூர், அரக்கோணம், திருப்பத்தூர் உள்பட 9 மாவட்டங்களில் அக்.,6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்.,12ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிரமாக ஆயத்தமாகி வருகின்றன.
இந்த நிலையில், ஊரக உள்ளாட்சிக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அந்த மனுவில், சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடந்த நிலையில், 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்தக்கூடாது. 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்துவது, கள்ள ஓட்டு போடுவது உள்ளிட்ட சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு வழிவகுத்து விடும். இந்த தேர்தலில் மத்திய அரசு ஊழியர்களை பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும். செப்.,14 ல் தேர்தல் ஆணையத்தில் பழனிசாமி அளித்த மனுவை பரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.