எம்.ஜி.ஆர் நினைவு தினம் – எடப்பாடி பழனிசாமி நினைவிடத்தில் மரியாதை

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆரின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி வருகிறார்.

அவருடன் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் மரியாதை செலுத்தி வருகிறார்கள். தொடர்ந்து எம்.ஜி.ஆர் நினைவிட நுழைவாயில் அருகே அமைக்கப்பட்டிருக்கக்கூடிய மேடையிலே நினைவு நாளின் உறுதி மொழியானது ஏற்கப்பட இருக்கிறது.

கடந்த டிசம்பர் 4-ம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாள் அன்றும் அவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எடப்பாடி பழனிச்சாமி சென்ற பிறகு தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வி.கே.சசிகலா உள்ளிட்டோர் வந்து எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த இருக்கிறார்கள் பல்வேறு தலைவர்கள் வரக்கூடிய காரணத்தினால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version