இவ்வண்டத்தில் நாம் மட்டும் தனியாகத்தான் உள்ளோமா? : பாகம் 2

நாம் தினந்தோறும் சின்னஞ் சிறிய சுறுசுறுப்பான எறும்புகளை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். அவை எண்ணிக்கையில் மிக அதிகம், சொல்லப்போனால் இந்த பூமியில் மனிதனை விட அவற்றின் எண்ணிக்கையே மிகமிக அதிகம். ஆனால் நாம் தினமும் சந்திக்கும் எறும்புகள் நம்மை உணர்ந்திருக்குமா அல்லது மனிதர்கள் எனும் ஒன்று இருப்பது அவர்களுக்கு தெரியுமா என்றால் அதற்கான பதில் நம்மிடம் இல்லை. எறும்புக்கு மனிதர்கள் என நாம் இருக்கிறோம் என்பதை நிரூபிப்பது எப்படி?.

இதே சூழ்நிலை வேற்றுகிரகவாசிகளுக்கும் இருக்குமேயானால் நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஒரு உண்மையை அது உண்மைதான் என யாரேனும் நிரூபிக்கும் வரை அதை நம்ப நாம் யாரும் தயாராக இல்லை. ஒரு காலத்தில் பூமி தட்டையானது. நாம் நீண்டதூரம் பயணம் செய்தால் அது கவிழ்ந்துவிடும் என நம்பப்பட்ட காலமும் இருந்தது. இதே போல வேற்றுகிரகவாசிகள் இருப்பதை 100 சதவிகித ஆதாரத்துடன் நிரூபிக்கவில்லை என்றால் அதை நாம் யாரும் நம்பப் போவதில்லை.

ஒருவேளை வேற்று கிரகவாசிகள் நம்மை கண்டுபிடித்தால் என்னவாகலாம். நாம் முதலில் கவனிக்க வேண்டியது அவை பார்க்கும் முதல் வேற்றுகிரக ஜீவராசிகள் நாம்தானா அல்லது இதற்கு முன்னர் பல்வேறு வகையான வேற்று கிரகவாசிகளை அவர்கள் கடந்துவிட்டனரா என்பதே.  ஒருவேளை அப்படியிருக்கும் பட்சத்தில் அப்படி கண்டுபிடிக்கப்பட்ட வேற்றுகிரகவாசிகளை இவர்கள் என்ன செய்திருப்பார்கள்? நம்மை கண்டபின் அவை நம்முடன் நட்புடன் பழக வாய்ப்பிருக்கிறதா அல்லது போர்த்தொடுக்க வாய்ப்பிருக்கிறதா எனும் கேள்விக்கு வேற்றுகிரகவாசிகளை பற்றிய ஆய்வு செய்யும் விஞ்ஞானி கூறியது “வேற்று கிரகவாசிகள் நம்மைக் கண்டால் நம்மை எப்படிப்பட்டவர்கள் என நினைப்பர். கண்டிப்பாக அமைதியை விரும்புபவர்கள் என நினைப்பதற்கு வாய்ப்பில்லை. காரணம் நம் தற்போதைய நிலையே. அண்டை நாடுகளுடன் போர், அகதிகளாக இந்த பூமியைச் சேர்ந்த மக்களையே நாடு நாடாக அலையவிடுவது, அணு ஆயுதங்கள் போன்ற பல்வேறு வெறுக்கத்தக்க காரியங்களை செய்யும் நம்மை கட்டுக்கோப்பாக ஆளவேண்டும், அல்லது இவர்களை அழித்து பூமியையும் அதன் இயற்கையையும் காக்கவேண்டும் என அவர்கள் நினைப்பதற்கே வாய்ப்புகள் அதிகம்.”

மேலும் அவை திரைப்படங்களில் வருவதைப் போல பச்சைவண்ணத்திலோ அல்லது வால் வைத்துக்கொண்டோ அகோரமாக இருக்கவேண்டிய அவசியமில்லை. அவை நாம் பார்க்க முடியாத வகையில் வேறு பரிமாணத்திலோ அல்லது Artifical Intelligence என்னும் நிலையைக் கூட எட்டியிருக்கலாம். நம்மைவிட திறன் வாய்ந்தவர்களாக தொழில் நுட்பத்தில் நம்மை விட சிறந்தவர்களாகக் கூட அவர்கள் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

புகழ் பெற்ற விஞ்ஞானியான Stephen Hawking வேற்றுகிரகவாசிகளை தேடுவதை விடுவதே சிறந்தது. ஏனெனில் மிகவும் முன்னேரிய உயிரினமாக நம்மை நாமே கருதும் நிலையில் நம்மைப் பார்த்தே நாம் பாடம் கற்க வேண்டும். இப்பூமியையும் அவற்றின் வளங்களையும், அதிலுள்ள மனிதர்களையும் மற்ற உயிரினங்களையும் நாம் எவ்வாறு நடத்துகிறோம் என்பதை முதலில் பார்க்கவேண்டும். வேற்று உலகங்களை தேடுவதற்கு பதிலாக நம் உலகத்தை நம் நன்றாக பார்த்துக்கொண்டால் போதும் என தெரிவித்திருக்கிறார்.


பறக்கும் தட்டு பற்றி வெளி வரும் செய்திகள் நிஜமா? வேற்றுக் கிரகவாசிகளை கண்டுபிடித்த நாம், நம் தேடலை இன்னும் விரிவுபடுத்த வேண்டுமா என்பன போன்ற பல கேள்விகளுக்கான விடையை அடுத்தடுத்த பாகங்களில் தெரிந்துகொள்ளுங்கள்.இதன் முதல் பாகத்தை படிக்க https://seithialai.com/science/are-we-alone-in-the-universe/

Exit mobile version