இவ்வண்டத்தில் நாம் மட்டும் தனியாகத்தான் உள்ளோமா? : பாகம் 1

இக்கேள்வி இரவில் நட்சத்திரங்கள் நிறைந்த வானைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் எழுந்திருக்கும்.  அது குறித்த பல்வேறு புத்தகங்கள் திரைப்படங்கள் சமீபத்தில் வெளிவந்த வண்ணம் இருந்தாலும் இந்த கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் தற்போது எழுந்ததல்ல.  

பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்துவரும் சாமானிய மனிதனில் இருந்து அறிஞர்கள் வரை அனைவரது மனதில் இருக்கும் கேள்வி. 

உலகின் பல்வேறு இடங்களிலும் செவி வழிப் பாடல்களாகவும், கதைகளாகவும், கோவில்கள், கட்டிடங்கள் போன்றவற்றில் உள்ள சிற்பங்களின் மூலம் அதை தெரிந்து கொள்ளலாம். நட்சத்திரங்கள், கோள்களைப் பற்றிய அறிவு இல்லாத காலங்களிலேயே வேற்றுகிரகவாசிகள் பற்றிய சிந்தனை வந்துள்ளது. தற்போது தொழில்நுட்பம் மிகவும் வளர்ந்துள்ள நிலையில் சூரியனைப் போன்றும் நம் பூமியைப் போன்றும் கோடிக்கணக்கான நட்சத்திரங்களும், கிரகங்களும் இருப்பதை அறிந்தவுடன் வேற்றுகிரகவாசிகள் இருப்பதற்கான சாத்தியக்கூறு அதிகமாவதை யாராலும் தடுக்கமுடியவில்லை.

இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் அவை நம்மை தொடர்புகொள்ளும் என அனைவரும் நம்பும் வேளையில் இதுவரை எந்த வேற்றுகிரக உயிரினமும் நம்மை ஏன் தொடர்புகொள்ளவில்லை? 

அதற்கான பல புனைவுக் கொள்கைகள் முன்வைக்கப்படுகின்றன. ஒருவேளை அவர்கள் நம்மை விட அறிவுத்திறன் வாய்ந்தவர்களாக இருந்து நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கலாம், அல்லது நாம் அனுப்பும் தகவல்களை பெறும் அளவுக்கு அவர்களது தொழில்நுட்பம் விரிவடையாமல் இருப்பதற்கு வாய்ப்புள்ளது, அல்லது வேற்று கிரகங்களில் ஆறறிவு படைத்த நம்மைப் போன்றவர்கள் இல்லாமல் குறைந்தளவு அறிவுத்திறன் வாய்ந்த உயிரினங்கள் இருப்பதற்கும் வாய்ப்புண்டு.

வேற்றுகிரக உயிரினங்கள் பூமியைப் போன்ற கிரகத்தில் தான் வாழ வேண்டும் எனும் அவசியம் எதுவும் இல்லை. அவர்களின் சுற்றுப்புறச் சூழல், காலசுழற்சி, வளிமண்டலம் போன்றவை முற்றிலும் வேறுபட்டு அதற்கேற்றார் போல் அவர்களது உடல் உருமாறியிருக்கலாம்.

இதுவரை ஏலியன்கள் எனப்படும் இந்த வேற்றுகிரகவாசிகளை கண்டுள்ளனரா? 

உலகின் பிரபலமான சிலர் கூட ஏலியன்கள் தங்களை அனுகியுள்ளதாக கூறியுள்ளனர்.!

உலகின் சில பிரதான கட்டிடங்கள், சிற்பங்கள், ஓவியங்கள் கூட மனிதனால் உருவாக்கியிருக்க வாய்ப்பே இல்லை என்னும் எண்ணத்தை உருவாக்கியிருக்கிறது. 

இன்னும் அந்தக் கேள்விகளுக்கான விடை தேடப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது. உலகின் பல இடங்கள் அத்தகைய ஆச்சரியங்களை ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றன. பறக்கும் தட்டு பற்றி வெளி வரும் செய்திகள் நிஜமா? வேற்றுக் கிரகவாசிகளை கண்டுபிடித்த நாம், நம் தேடலை இன்னும் விரிவுபடுத்த வேண்டுமா என்பன போன்ற பல கேள்விகளுக்கான விடையை அடுத்தடுத்த பாகங்களில் தெரிந்துகொள்ளுங்கள்.

Exit mobile version