ஐ.பி.எல் தொடரில் விளையாடமல் போனது வருத்தமே – முஸ்தாபிஜூர் ரஹ்மான் வேதனை

இலங்கை தொடரில் விளையாடுவதற்காக ஐ.பி.எல் தொடரை புறக்கணித்த முஸ்தாபிஜூர் ரஹ்மானுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதனால் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். ஆஸ்திரேலியாவில் அக்டோபர்- நவம்பர் மாதத்தில் நடைபெற இருந்த டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டதால் அந்த இடத்தில் ஐ.பி.எல் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

அக்டோபர்- நவம்பர் மாதங்கள் கிரிக்கெட் போட்டிகள் ஏதும் இல்லாததால் வங்காளதேச அணி இலங்கை சென்று டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட முடிவு செய்தது. இதனால் ஐ.பி.எல் ஏலத்தில் முஸ்தாபிஜூர் ரஹ்மான் இடம்பெற வாய்ப்பு இல்லாமல் போனது. அவரை மும்பை இந்தியன்ஸ் அல்லது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய இரண்டு அணிகளில் ஒன்று ஏலம் எடுக்க விரும்பியது.

வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு தடையில்லா சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்ததால் அவரால் ஏலத்தில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. வங்காளதேச டெஸ்ட் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கை செல்ல இருந்த நிலையில் தற்போது டெஸ்ட் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்படி வங்காளதேச வீரர்கள் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்துதல் வேண்டும் என இலங்கை கிரிக்கெட் போ்டு தெரிவித்தது. வங்காளதேச கிரிக்கெட் போர்டு 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் நடைமுறைக்கு ஒப்புக்கொள்ளவில்லை இதனால் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரை நம்பியிருந்த முஸ்தாபிஜூர் ரஹ்மான் ஐ.பி.எல் வாய்ப்பை இழந்துள்ளார்.

ஐ.பி.எல்.போட்டியில் விளையாடியிருந்தால் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் எடுக்கப்பட்டிருப்பார். தற்போது தேசிய அணிக்கு விளையாட முடியாமலும் ஐபிஎல் போட்டியில் விளையாட முடியாமலும் வருமானத்தை இழந்த சோகத்தில் முஸ்தாபிஜூல் ரஹ்மான் உள்ளார். 2015-16-ல் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாட வங்காளதேசம் அனுமதிக்க வில்லை. ஆனால் அதற்கான இழப்பீட்டை (30 லட்சம் டாகா) வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு முஸ்தாபிஜூர் ரஹ்மானுக்கு வழங்கியது.

தற்போது அதேபோல் வழங்க இயலாது என தெரிவித்துள்ளது. இதனால் சுமார் ஒரு கோடி டாக்கா வங்காளதேசம் பணத்தை அவர் இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ‘‘இலங்கை தொடர் தள்ளிப்போகும் என்று வங்காளதேசம் கிரிக்கெட் போர்டுக்கு தெரிந்திருந்தால் தடையில்லா சான்றிதழ் வழங்கி இருப்பார்கள். ஆனால் நடந்ததெல்லாம் நன்மைக்கே. ஐ.பி.எல்.போட்டியில் விளையாடி இருந்தால் வங்காளதேசம் பணத்திற்கு சுமார் ஒரு கோடி டாக்கா சம்பாதித்து இருப்பேன்’’ என்று முஸ்தாபிஜூர் ரஹ்மான் வருத்தத்துடன் தெரிவித்தார் .

Exit mobile version