மருத்துவ கழிவுகளால் குப்பை மேடாக மாறிய திருவாரூர் தண்டலை கிராமம்…

திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதியில் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் நாளொன்றுக்கு சுமார் 1,500 நோயாளிகள் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து பேசிய தண்டலை கிராம மக்கள்: இந்த தண்டலை கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அதில் பெரும்பாலானோர் விவசாயம்தான் செய்து வருகிறார்கள். இந்த மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்பட்ட ஊசிகள், சிரிஞ்ஜுகள், ரத்தக்கறை படிந்த பஞ்சுகள் உள்ளிட்ட மருத்துவ கழிவுகள் அனைத்தும் அருகில் உள்ள கிராமத்தில் திறந்தவெளியில் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கொட்டி வருவதாக அந்த கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதனால் எங்கள் கிராமத்தில் நோய் தொற்று பரவும் அபாயம் உருவாகியுள்ளது. மேலும், இரவு நேரங்களில் சிலர் இந்த மருத்துவ கழிவுகளை தீயிட்டு எரிப்பதால், அதிலிருந்து வெளியாகும் நஞ்சுப் புகையின் காரணமாக எங்கள் கிராமத்தில் பலருக்கு நுரையீரல் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதனால் தங்கள் கிராமத்தில் வசிக்கக்கூடிய மக்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாகவும் கூறுகின்றனர்.எனவே, திருவாரூர் மாவட்ட நிர்வாகம் இந்த மருத்துவக் கழிவுகளை எங்கள் கிராமத்தில் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.

Exit mobile version