அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், கடந்த 2 நாட்களில் 2½ லட்சம் மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

2020-21-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை எப்பொழுது என அனைவரும் ஆர்வமுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், நேற்று முன்தினம் முதல், மாணவர் சேர்க்கை அனைத்துப் பள்ளிகளிலும் துவங்கியது.
1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை இப்போது துவங்கி நடந்து வருகிறது. மாணவர் சேர்க்கை தொடங்கிய முதல் நாளிலேயே, பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் பள்ளிகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். கொரோனா பரவலின் காரணமாக, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இதில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 2½ லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டு உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
மேலும், இனி வரக்கூடிய நாட்களிலும் இதே அளவில் மாணவர்களின் சேர்க்கை இருக்க வாய்ப்புள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இதைத்தொடர்ந்து, வருகிற 24-ஆம் தேதி (திங்கட்கிழமை) முதல் பிளஸ்-1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற இருக்கிறது.