சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் 100 சதவிகித விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளையும் சரிபார்க்கக் கோரியும், தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரியும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு இன்று (செப்டம்பர் 3) தீர்ப்பளித்தது.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அந்தத் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். தேர்தல் முடிவுக்குப் பின்னர் ஸ்டாலின் அளித்த விண்ணப்பத்தின் அடிப்படையில் கொளத்தூர் தொகுதியில் 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய காகிதத் தணிக்கைச் சீட்டு இயந்திரங்கள் (VVPAT) சரிபார்க்கப்பட்டன.
விவிபேட் சரிபார்ப்பில் முறைகேடு என புகார்
இந்தச் சரிபார்ப்பின்போது முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி மு.க.ஸ்டாலின் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சரிபார்ப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சில வாக்குப்பதிவு இயந்திரங்கள் திடீரெனக் கோளாறாகி நின்றுவிட்டதாகவும், ஆறு வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளையும் விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளையும் ஒப்பிட்டபோது பல்வேறு முரண்பாடுகள் கண்டறியப்பட்டதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களையும் முழுமையாகச் சரிபார்க்க உத்தரவிட வேண்டும் என்று ஸ்டாலின் கோரியிருந்தார். மேலும் தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் வெற்றியை செல்லாது என அறிவித்து, தன்னை வெற்றி பெற்ற வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
‘தேர்தல் முடிவான மூன்று நாட்களிலேயே விண்ணப்பித்தோம்’
இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மு.க.ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதிட்டார்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளைச் சரிபார்க்கக் கோரி தேர்தல் முடிவுகள் வெளியான மூன்று நாட்களுக்குள், மே 7-ஆம் தேதியே விண்ணப்பம் அளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். ஆனால், தேர்தல் வழக்கு தாக்கல் செய்வதற்கான 45 நாள் காலக்கெடு முடிந்த பிறகே இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டதாகவும், அதன் பின்னரே கூறப்படும் முரண்பாடுகள் தெரியவந்ததால் தற்போதைய வழக்கைத் தொடர்வதைத் தவிர வேறு நிவாரணம் இல்லை என்றும் ஸ்டாலின் தரப்பில் வாதிடப்பட்டது.
‘எம்.எல்.ஏ. வெற்றியை எதிர்க்க தேர்தல் வழக்குதான் வழி’
தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் இந்த வடிவிலான வழக்கில் விசாரணைக்கு உகந்தவை அல்ல என்று எதிர்ப்பு தெரிவித்தார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.வின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோர வேண்டுமென்றால் சட்டத்தில் வகுக்கப்பட்ட நடைமுறையின்படி தேர்தல் வழக்குதான் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டால் இதேபோன்ற கோரிக்கைகளுடன் மேலும் வழக்குகள் தொடரப்படுவதற்கு வழிவகுக்கும் என்பதால் மனுவை ஏற்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஸ்டாலின் மனு தள்ளுபடி
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஏற்கெனவே தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தனர். இந்த நிலையில் இன்று தீர்ப்பளித்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, ஸ்டாலின் தாக்கல் செய்த இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
