3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஒடிசா பகுதிகளில் நிலவுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று வலுவிழக்கக் கூடும். இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 15ம் தேதி வரை ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி,மின்னலுடன் மழை வரலாம். மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதிகள், இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், கேரள-கர்நாடக கடலோரப் பகுதிகள், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் 14ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version