September 18, 2026 08:48 AM GMT+5:30
சென்னை: முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பான திருத்த மசோதா மட்டும் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஆளுநரின் ஒப்புதலைத் தொடர்ந்து சட்டங்களாகியவற்றில் 11 சட்டங்கள் செப்டம்பர் 15 தேதியிட்ட தமிழ்நாடு அரசின் சிறப்பு அரசிதழில் Act No.14 முதல் Act No.24 வரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. Stationery and Printing Department
அரசிதழில் இடம்பெற்ற 11 சட்டங்கள் என்னென்ன?
செப்டம்பர் 15 அரசிதழில் தமிழ்நாடு நகர மற்றும் ஊரமைப்பு திருத்தச் சட்டம், தமிழ்நாடு தொழில் எளிதாக்கல் திருத்தச் சட்டம், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் திருத்தச் சட்டம், தமிழ்நாடு சம்பளம் வழங்கல் திருத்தச் சட்டம், தமிழ்நாடு ஊராட்சிகள் இரண்டாவது திருத்தச் சட்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இவற்றுடன் தமிழ்நாடு நிதி ஒதுக்கீடு எண் 3 சட்டம், தமிழ்நாடு வேளாண் விளைபொருள் சந்தைப்படுத்தல் ஒழுங்குமுறை இரண்டாவது திருத்தச் சட்டம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கூடுதல் பணிகள் திருத்தச் சட்டம், தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி திருத்தச் சட்டம், தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி இரண்டாவது திருத்தச் சட்டம், தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி இரண்டாவது திருத்தச் சட்டம் ஆகியவையும் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.
இதன் மூலம் நகரமைப்பு, தொழில் நடைமுறைகள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், உள்ளாட்சி நிர்வாகம், வேளாண் சந்தைப்படுத்தல், TNPSC-க்கு கூடுதல் பணிகள், GST மற்றும் VAT உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தங்கள் நடைமுறைக்கு வருவதற்கான சட்டபூர்வ ஒப்புதல் கிடைத்துள்ளது.
குடியரசுத் தலைவரிடம் சென்ற தனியார் பல்கலைக்கழக மசோதா
தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்த மசோதா, தனியார் பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான நிலம் மற்றும் நிரந்தர வைப்புத் தொகை தொடர்பான விதிகளை மாற்ற முன்மொழிகிறது. தற்போதுள்ள 100 ஏக்கர் நிலத் தேவையை சென்னை மாநகராட்சிப் பகுதியில் 12 ஏக்கர், பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 18 ஏக்கர், மற்ற பகுதிகளில் 25 ஏக்கர் எனக் குறைக்க மசோதா வகை செய்கிறது. நிரந்தர வைப்புத் தொகையை ரூ.50 கோடியிலிருந்து ரூ.25 கோடியாகக் குறைக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
இந்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டபோதே சில கட்சிகளின் எதிர்ப்பைச் சந்தித்தது. நிலம் மற்றும் நிதித் தேவைகளைக் குறைப்பது தனியார் பல்கலைக்கழகங்களின் விரிவாக்கத்தை அதிகரிக்கும் என்று எதிர்ப்பாளர்கள் தெரிவித்தனர். அரசு தரப்பில் நிலப்பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களின் அடிப்படையில் விதிகளை மாற்ற வேண்டிய தேவை முன்வைக்கப்பட்டது.
தற்போது இந்த மசோதா குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதனால் மற்ற மசோதாக்களைப் போல இது இன்னும் சட்டமாக அமலுக்கு வந்ததாகக் கருத முடியாது.
