வேளாண் மசோதாக்களை ஆதரிக்க எங்ககிட்ட இத்தனை காரணம் இருக்கு.. முதலமைச்சர் விளக்கம்

வேளாண் மசோதா மூலம் விளை பொருட்களின் விலை வீழ்ச்சி அடைவதை தடுக்க முடியும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார்.. மேலும், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, புதிய திட்டப் பணிகளையும் தொடங்கி வைத்தார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், வேளாண் மசோதாக்கள் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

முதலமைச்சர் கூறியதாவது:
வேளாண் மசோதா மூலம் விளை பொருட்களின் விலை வீழ்ச்சி அடைவதை தடுக்க முடியும். வேளாண் மசோதாக்களை மாநிலங்கலவையில் எதிர்த்தது குறித்து, அதிமுக எம்பி எஸ்.ஆர்.பாலசுப்ரமணியத்திடம் விளக்கம் கேட்கப்படும் என்றார்.

வேளாண் மசோதா மூலம் உணவு பதப்படுத்துதல் துறை வளர்ச்சி அடையும், அதன்மூலம் கிராமப்பகுதிகளில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும். விவசாயி விருப்பம் கொண்டிருந்தால் மட்டுமே வியாபாரியிடம் ஒப்பந்தம் மேற்கொள்ளலாம். வியாபாரிகளுடன் விவசாயிகள் ஒப்பந்தம் செய்ய வேண்டியது கட்டாயம் இல்லை. விளை பொருட்களுக்கான விலை உள்ளிட்டவற்றை விவசாயிகள் தீர்மானிக்க முடியும்.
ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட தொகையை விட விளை பொருட்கள் உயர்ந்தால் வியாபாரிகள் விவசாயிகளுக்கு லாபத்தில் பங்கு அளிக்க வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்தார்.

வேளாண் மசோதாக்களின் அம்சங்கள் எதுவும் தெரியாமலேயே மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். ஒப்பந்தம் செய்த தொகைக்கு விளை பொருட்களை கொள்முதல் செய்யவில்லை என்றால் வியபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வழிவகை உள்ளது
வேளாண் மசோதாக்களால் விவசாயிகள் எந்த நிலையிலும் நஷ்டம் அடையமாட்டார்கள்.
விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்ய முடியும். உழவர் சந்தைகள், மண்டிகள் இயங்க புதிய மசோதாக்கள் தடை எதுவும் விதிக்கவில்லை என, வேளாண் மசோதாகளுக்கு ஏன் ஆதரவு அளிக்கிறோம் என முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.

உழவர் சந்தைகள், மண்டிகள் இயங்க தடை வரும் என்று எதிர்கட்சிகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன என குற்றம்சாட்டிய முதலமைச்சர்,
விவசாயிகள் சந்தை கட்டணம், வரி இல்லாமல் தங்கள் விளை பொருட்களை விற்பனை செய்ய முடியும்,
பஞ்சாப் சந்தைகளில் விவசாயப் பொருட்களை கொள்முதல் செய்ய 8.5 சதவீதம் வியாபாரிகள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது என்றார்.

மேலும், விவசாயிகள் – வியாபாரிகள் ஒப்பந்தத்தால் இடைத்தரகர்கள் ஆதிக்கம் முடிவுக்கு வரும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

Exit mobile version