மைக்ரோசாப்டின் இண்டர்நெட் எக்ஸ்பிளோரரின் சேவை ஜூன் 15 ம் தேதி உடன் நிறுத்தப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1995 ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை அறிமுகம் செய்தது. இணையத்தை பயன்படுத்த தொடங்கிய பலரும், தங்களுடைய செயல்பாட்டை இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் தான் தொடங்கி இருப்பார்கள்.
ஆனால் தற்போது பலரும் கூகுள் குரோம், பயர்பாக்ஸ், மைக்ரோசாஃப்ட் எட்ஜ் போன்ற தேடல் பொறியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த பிரிவில் நடந்து வரும் போட்டி காரணமாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை நிறுத்த முடிவு செய்துள்ளது.
வரும் புதன்கிழமையுடன் இந்த சேவை நிறுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மைக்ரோசாஃப்ட் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஜூன் 15, 2022 அன்று முதல் விண்டோஸ் 10 இன் சில பதிப்புகளில் இனி வேலை செய்யாது. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் அனுபவத்தை விரும்புவர்கள் மைக்ரோசாஃப்ட் எட்ஜ் பிரவுசரை பயன்படுத்தலாம். இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை விட மைக்ரோசாஃப்ட் எட்ஜ் வேகமான, பாதுகாப்பான மற்றும் நவீன உலாவல் அனுபவமாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.