ஆற்றை சுத்தம் செய்ய சென்ற போது விபரீதம்.. நீரில் மூழ்கி 11 மாணவர்கள் பலியான சோகம்…

இந்தோனேசியாவில் ஆற்றை சுத்தம் செய்யச் சென்ற பள்ளி மாணவர்கள் 11 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியா நாட்டின் மேற்கு ஜாவா மாகாணத்தின் சியாமிஸ் நகரில் உள்ள மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 150பேர் ஆசிரியர்கள் மேற்பார்வையில் நேற்று முன்தினம் அங்குள்ள சிலியூர் ஆற்றை சுத்தம் செய்ய சென்றனர். ஆற்றில் இருந்த அளவுக்கதிகமான நீர் மற்றும் பாறைகளுக்கு நடுவே மாணவர்கள் ரயில் பெட்டியை போல கைகோர்த்துக்கொண்டு மறு கரைக்குச் செல்ல 21 மாணவர்கள் முயற்சி செய்த நிலையில் ஒரு மாணவர் கால் தவறி ஆற்றிற்குள் விழுந்ததார்.அவரை தொடர்ந்து மற்ற 20 மாணவர்களும் அடுத்தடுத்து ஆற்றுக்குள் மூழ்கினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது.

கரையில் நின்று கொண்டிருந்த சக மாணவர்கள் அனைவரும் தங்கள் நண்பர்கள் ஆற்றில் மூழ்குவதை கண்டு சத்தம் போட்டனர். மாணவர்களின் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் ஆற்றுக்குள் இறங்கி மாணவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். மேலும் இது குறித்து மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.ரப்பர் படகை வைத்து பல மணி நேரம் நடந்த இந்த மீட்பு பணியில் 10 மாணவர்கள் உயிரோடும், 11 மாணவர்களை சடலமாகவும் மீட்டனர். உயிரோடு மீட்கப்பட்ட மாணவர்கள் சுயநினைவை இழந்த நிலையில் அவர்களுக்கு அங்குள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆற்றை சுத்தம் செய்ய சென்ற பள்ளி மாணவர்கள் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version