மீண்டும் ரூ.100ஐ தொடப்போகும் பெட்ரோல் விலை: அச்சத்தில் சாமானிய மக்கள்!!

கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகள் மற்றும் சாமானிய மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப தினந்தோறும் பெட்ரோல் டீசல் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை கடந்த சில மாதங்களாக விலை உச்சத்தில் இருந்து வந்த நிலையில், கடந்த ஆகஸ்டு மாதம் 2வது வாரத்தில் இருந்து விலை குறையத் தொடங்கியது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100ஐ தாண்டி விற்பனையான நிலையில், விலை குறைவால் அதற்கு கீழ் சரிந்தது. பட்ஜெட்டில் முதல்வரின் அறிவிப்பையடுத்து பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த மாதம் 28ம் தேதி முதல் பெட்ரோல் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. அந்தவகையில் இன்றும் அதன் விலையில் மாற்றம் கண்டுள்ளது. இன்று லிட்டருக்கு 22 காசு உயர்ந்து, ஒரு லிட்டர் 99 ரூபாய் 80 காசுக்கு விற்பனை ஆனது.

இதே நிலை நீடித்தால் இன்னும் ஓரிரு நாட்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் மீண்டும் ரூ.100ஐ தொட்டுவிடவுள்ளது. பெட்ரோல் விலையை போலவே, டீசல் விலையும் கடந்த மாதம் 24ம் தேதி முதல் ஏறுமுகத்திலேயே இருக்கிறது. இன்று லிட்டருக்கு 28 காசு அதிகரித்து, சென்னையில் ஒரு லிட்டர் டீசல் 95 ரூபாய் 02 காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Exit mobile version