‘வாரிசு’ படம் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் அதிக திரையரங்குகளில் வெளியிடப்படும்!

விஜய் நடித்துள்ள வாரிசு பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. தமிழ்நாட்டில் அதிக தியேட்டர்களில் வாரிசு திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை தெலுங்கு டைரக்டர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி உள்ளார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரித்துள்ளார்.

விஜய்க்கு தெலுங்கிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர். இதனால் வாரிசு படத்தை ஆந்திரா, தெலுங்கானாவிலும் கூடுதல் தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், தெலுங்கு தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் பொங்கல் பண்டிகையில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து அதிக தியேட்டர்களை ஒதுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த முடிவால் விஜய்யின் வாரிசு திரைப்படம் தெலுங்கில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. இந்த முடிவுக்கு தமிழ் சினிமாவில் இருந்து பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் விஜய்யின் வாரிசு திரைப்பட ரிலீஸ் தொடர்பாக தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திடம் பேசி உள்ளோம் என்றும் அவர்கள் இது தொடர்பாக நல்ல முடிவை தெரிவிப்பதாக கூறியுள்ளனர் என்று தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்படும் என்றும், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ‘வாரிசு’ அதிக திரையரங்குகளில் வெளியிடப்படும் என்றும் தயாரிப்பாளர் தில் ராஜூ தெரிவித்துள்ளார்.

Exit mobile version