அசாம்: சிறுத்தைப்புலி தாக்கியதில் 13 பேர் காயம்

அசாமின் ஜோர்ஹத் மாவட்டத்தில் தியோக் பகுதியருகே செனிஜான் என்ற இடத்தில் மழைக்காடு ஆய்வு மையம் அமைந்துள்ளது. இந்நிலையில், அந்த பகுதியில் சுற்றி திரிந்து வரும் சிறுத்தைப்புலி ஒன்று காண்போரை எல்லாம் தாக்கியுள்ளது. இந்த சம்பவம் பற்றி மாவட்ட வன துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, காலை 10.30 மணியளவில் சிறுத்தைப்புலி தாக்குதல் பற்றிய தகவல் எங்களுக்கு கிடைத்தது.

இதனை தொடர்ந்து எங்களது குழு சம்பவ பகுதிக்கு சென்றது. இதில், எங்கள் பணியாளர்கள் 2 பேர் மீது சிறுத்தைப்புலி தாக்குதல் நடத்தியுள்ளது. எங்களுடைய 2-வது குழுவும் அந்த பகுதிக்கு சென்றுள்ளது.நாங்கள் நிலைமையை கண்காணித்து வருகிறோம். சிறுத்தைப்புலியை மயக்கமடைய செய்து பிடிக்க முயற்சித்து வருகிறோம். தற்போது இதற்கான பணிக்காக 3 குழுக்கள் உள்ளன என கூறியுள்ளார்.

இந்நிலையில், மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு மோகன் லால் மீனா செய்தியாளர்களிடம் கூறும்போது, 3 வன துறை பணியாளர்கள் உள்பட 13 பேர் சிறுத்தைப்புலி தாக்குதலில் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். சிகிச்சைக்கு பின் குணமடைந்து உள்ளனர் என கூறியுள்ளார்.

சிறுத்தைப்புலி, ஆய்வு மையம் பகுதியருகே பல அடி உயர காம்பவுண்டு வேலியின் மீது, உயரத்தில் எம்பி குதித்து தப்பி சென்றது. வழியில் வாகனத்தில் வந்தவர்களையும் தாக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன. இதன்பின்பு சாலை வழியே தப்பியோடி உள்ளது.

Exit mobile version