சத்தீஷ்காரில் என்கவுண்ட்டர்; 3 மாவோயிஸ்டுகள் சுட்டு கொலை

சத்தீஷ்காரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் பொம்ரா வனப்பகுதியில், மீர்துர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி உள்ளனர் என பாதுகாப்பு படையினருக்கு உளவு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த பகுதியை சுற்றி வளைத்த வீரர்கள் மற்றும் போலீசார் அதிரடி என்கவுண்ட்டரில் ஈடுபட்டனர்.

இதில் மத்திய ரிசர்வ் படையினருடன் இணைந்து, சிறப்பு அதிரடி படை மற்றும் மாவட்ட ரிசர்வ் படையினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில், 30 முதல் 40 மாவோயிஸ்டுகள் ஒன்றாக கூடியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

இந்த மோதலில், 3 மாவோயிஸ்டுகள் வரை சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர். அவர்களில் பெண் மாவோயிஸ்டு ஒருவரும் அடங்குவார். தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது என பஸ்தார் வன சரக ஐ.ஜி. சுந்தர்ராஜ் கூறியுள்ளார்.

சத்தீஷ்காரில் மாவோயிஸ்டுகள் மற்றும் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் பரவலாக பல இடங்களில் காணப்படுகிறது. அவ்வப்போது வன பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்து, அரசியல்வாதிகள், பாதுகாப்பு படை உள்ளிட்டோர் மீது தாக்குதல்களும் நடத்தப்படுவதுண்டு. இதில், பொதுமக்களும் சில சமயங்களில் இலக்காவதுண்டு.

Exit mobile version