“581 கிலோ கஞ்சாவை சாப்பிட்டு விட்டது எலி..” எலி மீது பழி போட்ட போலீஸ்!

உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா காவல் நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சுமார் 700 கிலோ கஞ்சாக்கள் பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் மதுரா காவல்துறை நெடுஞ்சாலையில் நடத்திய மெகா கஞ்சா வேட்டையில் 581 கிலோ கஞ்சாக்கள் கடத்தல்காரர்களிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

கடத்தல்காரர்கள் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில், குற்றத்தை நிரூபணம் செய்து தண்டனையை அறிவிக்க பறிமுதல் செய்த கஞ்சாவை சமர்ப்பிக்க வேண்டும் என கோர்ட்டு போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதைத் தொடர்ந்து மதுரா போலீசார் கோர்ட்டில் அளித்த பதில் தான் பரபரப்பை கிளப்பியுள்ளது. மதுரா காவல்நிலைய ஸ்டோர் ரூம்மில் எலித்தொல்லை ஜாஸ்தியாக இருப்பதாகவும், அந்த எலிக்கள் கிலோக்கணக்கில் இருந்த கஞ்சா அனைத்தையும் சாப்பிட்டு விட்டதாகவும், எனவே 581 கிலோ கஞ்சாவை ஆதாரமாக சமர்ப்பிக்க முடியவில்லை எனவும் பதில் அளித்துள்ளனர்.

இதனை கேட்டு நீதிபதிகள் அதிர்ந்து போயினர். இது தொடர்பாக நடத்திய தீவிர விசாரணையில், பறிமுதல் செய்த போதைபொருட்களை கோர்ட்டில் ஒப்படைக்க கூறியபோது, அதனை வேறொருவரிடத்தில் அதிக விலைக்கு விற்று விட்டு எலிகளின் மீது பழிசுமத்தியதில் விசாரணையில் அம்பலமாகியது. இதேபோல் 2017ஆம் ஆண்டு பீகார் மாநில காவல்துறை பறிமுதல் செய்து வைத்திருந்த ஆயிரக்கணக்கான லிட்டர் சாராயத்தை எலிகள் குடித்து குடித்து காலி செய்துவிட்டதாக பரபரப்பு புகாரை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version