ஈரான் போராட்டத்தில் கைதாகி சிறையில் இருக்கும் பெண்களுக்கு பாலியல் தொல்லை..!

ஈரானில் ‘ஹிஜாப்’ விவகாரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் அரசுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டம் வெடித்தது. 3 மாதங்களாக நடைபெற்ற இந்த போராட்டம் ஈரானை உலுக்கியது. ஈரான் அரசு இரும்பு கரம் கொண்டு போராட்டத்தை ஒடுக்கியது. போராட்டத்தில் 500-க்கும் அதிகமானோர் பலியாகினர்.

பெண்கள், சிறுவர்கள் உள்பட 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களுக்கு மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை அந்த நாட்டின் கோர்ட்டு வழங்கி வருகிறது. இதனை சர்வதேச மனித உரிமை அமைப்புகள் வன்மையாக கண்டித்து வருகின்றன.

இந்த நிலையில் போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போராட்ட வழக்கில் கைதாகி டெஹ்ரானில் உள்ள சிறையில் இருக்கும் மனித உரிமை ஆர்வலரான நர்கீஸ் முகமதி என்கிற பெண் சிறையில் பெண்களுக்கு நடக்கும் அவலங்கள் குறித்து சர்வதேச ஊடகங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் அவர், சிறையில் உள்ள பெண்கள் போலீஸ்காரர்களால் கற்பழிக்கப்படுவதாகவும், அடித்து துன்புறுத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். எனினும் இந்த குற்றச்சாட்டுகளை ஈரான் அரசு மறுத்துள்ளது.

Exit mobile version