லக்கிம்பூரில் கலவரம் நடந்த இடத்திற்கு செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் இருக்கும் காங்கிரஸ் நிர்வாகி பிரியங்கா காந்தி, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
லக்கிம்பூர் பகுதியில் அரசு விழாவில் பங்கேற்கச் சென்ற மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவின் காரை, அந்தப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் முற்றுகையிட்டு கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தினர். அப்போது ஆஷிஸ் மிஸ்ராவின் கார் மோதப்பட்டதில் 4 விவசாயிகள் இறந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, வெடித்த வன்முறையில், பத்திரிகையாளர் உட்பட மேலும் ஐந்து பேர் உயிரிழந்தனர். இதன்மூலம், லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்து அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து லக்கிம்பூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று அதிகாலை பன்வீர்பூர் கிராமத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். பிரியங்கா காந்தியை பன்வீர்பூர் கிராமத்திற்குள் நுழைய அனுமதிக்காமல், கிராம எல்லையிலேயே போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, அவர் போலீசார் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். பிரியங்கா காந்தியின் கைதுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் கடுமையான கண்டனங்கள் மற்றும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், போலீசாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் இருக்கும் பிரியங்கா காந்தி, தான் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார். மேலும், அவர் அறையை விளக்கமாறு கொண்டு தூய்மை செய்வது போன்ற வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
